உ.பி.யில் மக்கள் தொகை கிடுகிடுவென குறைந்து வருகிறது.. உறுதி செய்யும் டேட்டா.. பிறகு ஏன் கெடுபிடி?
டெல்லி: உத்தர பிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் அரசாங்கம் 2026 க்குள் மொத்த கருவுறுதல் வீதத்தை (டி.எஃப்.ஆர்) அதன் தற்போதைய மதிப்பான 2.7 இலிருந்து 2.1 ஆகக் கொண்டுவருவதன் மூலம் மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என்று ஒரு புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது.
ஆனால், மக்கள் தொகை மிகுந்த உத்தரபிரதேசம் கடந்த பல ஆண்டுகளாகவே, கருவுறுதல் விகிதத்தில் வீழ்ச்சியை பார்த்து வருவதாகத்தான் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உத்தரபிரதேச மாநில அரசு 2021-2030 வரையிலான மக்கள் தொகை கொள்கையை சமீபத்தில் வெளியிட்டது. அப்போது இரண்டு குழந்தைக்கு மேல் பெற்ற பெற்றோர் என்றால் அரசு வேலை கிடையாது, ரேஷனில் பொருட்கள் கிடையாது உள்ளிட்ட நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஒரு பெண்ணுக்கு இனப்பெருக்க ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை என்பதுதான் கருவுறுதல் வீதம். அந்த வகையில், உ.பி.யில் 17 ஆண்டுகளில், அதாவது, 1999ல் 4.06 என்ற அளவில் இருந்து, 2016ல் 2.7 என்ற அளவுக்கு குறைந்துவிட்டது. அதே நேரத்தில் இந்தியா முழுக்க கருவுறுதல் 0.7 சதவீதம் அளவுக்குதான் குறைந்துள்ளது. எனவே உ.பி. மக்கள் குழந்தை பிறப்பை குறைத்துள்ளனர் என்பதுதான் புள்ளி விவரம் சொல்லும் செய்தி.
2030 க்குள் டி.எஃப்.ஆரை 1.9 ஆகக் கொண்டுவருவது இலக்கு என்று உத்தர பிரதேச அரசு கூறியுள்ளது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (என்.எஃப்.எச்.எஸ் -4) (2015-16) இன் படி, டி.எஃப்.ஆர் விகிதம், உத்தரபிரதேசத்தில் நகர்ப்புறங்களில் 2.1 என்ற அளவாகவும், கிராமப்புறங்களில் இது 3.0 ஆகவும் இருந்தது. 2006 மற்றும் 2016 க்கு இடையில், மாநிலத்தின் மொத்த கருவுறுதல் வீதம் ஒரு பெண்ணுக்கு 1.1 குழந்தை அளவுக்கு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
1998-99 ஆம் ஆண்டில், உ.பி.யின் மொத்த கருவுறுதல் வீதம் 4.06 ஆக இருந்தது. அப்போது மாநிலத்தின் நகர்ப்புறங்களில், டி.எஃப்.ஆர் 2.91 ஆகவும், கிராமப்புறங்களில் இது 4.39 ஆகவும் இருந்தது. கிராமப்புறங்களில் எப்போதுமே குழந்தை பிறப்பு விகிதம் அதிகம்தான்.
Recommended Video
கல்வியறிவு உள்ளோருடன் ஒப்பிடும்போது பள்ளிக்கல்வி இல்லாத பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுள்ளனர் என்றும் தரவு தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications