துரதிர்ஷ்டம்.. தவறான தகவலை வெளியிடாதீங்க! மதசுதந்திரம் பற்றிய அமெரிக்க அறிக்கைக்கு இந்தியா பதிலடி
டெல்லி: இந்தியாவில் 2021 ஆண்டு முழுவதும் மதசிறுபான்மை மக்களுக்கு எதிராக கொலை, தாக்குதல்கள் நடந்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ‛‛சர்வதேச உறவுகளிலும் வாக்கு வங்கி அரசியல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இந்தியா எப்போதுமே மத சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை மதித்து நடக்கிறது'' என பதிலடி கொடுத்துள்ளார்.
சர்வதேச நாடுகளில் பின்பற்றப்படும் மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சத்தின் செயலாளர் ஆன்டனி பிளிங்கன் சார்பில் 2021ம் ஆண்டில் இந்தியா உள்பட பிற நாடுகளில் உள்ள மதசுதந்திரங்கள் தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

அறிக்கை வெளியீடு
உள்நாட்டு வகாரங்களில் பிறநாடுகள் தலையிடுவதை இந்தியா விரும்புவது இல்லை. இதனால் தான் இதுதொடர்பான அறிக்கைகள், கருத்துகளுக்கு தொடர்ந்து இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சமீபத்தில் இந்தியாவின் மதசுதந்திரம் மிகவும் மோசமாக உள்ளதாக மதசுதந்திர அமைப்பு சார்பில் வெளியிட்ட அறிக்கையை இந்தியா நிராகரித்து இருந்தது. இந்நிலையில் தான் அமெரிக்கா சார்பில் சர்வதேச நாடுகளின் மதசுதந்திரம் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து தாக்குதல்
இதில் இந்தியாவுக்கான அத்தியாயத்தில் இந்திய ஊடகங்கள் மற்றும் அரசின் அறிக்கைகள் அடிப்படையில் சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளது. அதில் மதசிறுபான்மை மக்கள் மீது கொலை, தாக்குதல், மிரட்டல் ஆண்டு முழுவதும் நடந்துள்ளது. பசுவதை அல்லது மாட்டிறைச்சி விவகாரங்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது. மேலும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் பேச்சும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல விஷயங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

இந்தியா கடும் எதிர்ப்பு
அமெரிக்காவின் இந்த அறிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்வதேச உறவுகளிலும் வாக்கு வங்கி அரசியல் நடப்பதாகவும், உறுதியான தகவல்கள் இன்றி பிற நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாகவும் கடுமையாக இந்தியா சாடியுள்ளது. இதுதொடர்பாக இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது:

துரதிர்ஷ்டவசமானது
"சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க வெளியுறவுத்துறையின் 2021ம் ஆண்டுக்கான அறிக்கையையும், மூத்த அமெரிக்க அதிகாரியின் தவறான தகவல்களையும் கவனித்தோம். சர்வதேச உறவுகளில் வாக்கு வங்கி அரசியல் நடைமுறையில் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இத்தகைய அறிக்கைகளில் ஒருங்கிணைந்த கருத்துகள் அடிப்படையிலான மதிப்பீடுகள் வேண்டுமே தவிர பாரபட்சமான பார்வையை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

மதசுதந்திரம், மனித உரிமைகளுக்கு மதிப்பு
இந்தியா என்பது இயற்கையாகவே பன்முகத்தன்மையுடன் உள்ளது. இந்தியா எப்போதுமே மத சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை மதித்து நடக்கிறது. அமெரிக்கா உடனான எங்கள் கலந்துரையாடல்களின்போது இனரீதியாக தூண்டப்பட்ட தாக்குதல்கள், வெறுக்கத்தக்க குற்றங்கள் மற்றும் துப்பாக்கி கலாசாரம் கவலையளிப்பதாக தொடர்ந்து சுட்டிக்காட்டியுள்ளோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications