படம் பார்க்க நாங்களா ஆட்களை கூட்டி வர முடியும்.. தி கேரளா ஸ்டோரி வழக்கில் தமிழக அரசு பதில்
டெல்லி: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்குத் தமிழக அரசு நிழல் தடை விதித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு தனது பிரமாண பத்திரத்தில் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியது. கடந்தாண்டு காஷ்மீர் பைல்ஸ் படம் வெளியான போது என்ன மாதிரியான ரிஆக்ஷன் இருந்ததோ அதேபோன்ற ஒரு ரிஆக்ஷனே கேரளா ஸ்டோரி படமும் உருவாக்கியது.
அதாவது தி கேரளா ஸ்டோரி படத்திற்கு சில குறிப்பிட்ட மாநிலங்கள் வரிவிலக்கை அறிவித்தன. அதேநேரம் மேற்கு வங்கம் உள்ளிட்ட வேறு சில மாநிலங்கள் இந்தப் படத்திற்குத் தடையும் விதித்தன.
தமிழ்நாடு அரசு: தமிழ்நாட்டில் தொடக்கத்தில் இந்தப் படம் திரையிடப்பட்ட போதிலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் கேரளா ஸ்டோரி திரையிடலை நிறுத்துவதாகத் தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் கடந்த மே 7 ஆம் தேதி அறிவித்தது. மேலும், மல்டிபிளக்ஸ்கள் படத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாகத் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இதனிடையே இது தொடர்பாக சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் தமிழக அரசு சார்பில் இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தி கேரளா ஸ்டோரி படத்துக்கு அரசு நிழல் தடை விதித்துள்ளதாகப் பொய்யான தகவல்களைப் பரப்புவதாகவும் பார்வையாளர்களின் வரவேற்பு இல்லாமல் போனதே படம் திரையிடுவதை நிறுத்த காரணம் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், "பார்வையாளர்களின் வரவேற்பு குறைவாக இருந்ததால் அவர்களைப் படத்தைத் திரையிடவில்லை.. திரையரங்குகளுக்குப் பாதுகாப்பை வழங்குவதை மட்டுமே அரசால் செய்ய முடியும்.. பார்வையாளர்களை அதிகரிக்க அரசால் எதுவும் செய்ய முடியாது" என்று கூறப்பட்டுள்ளது.
பதில் மனு: முன்னதாக தமிழகத்தில் கேரளா ஸ்டோரி படத்திற்குத் தமிழக அரசு தடை விதித்துள்ளதாகக் கூறி திரைப்பட தயாரிப்பாளர்கள் தொடர்ந்த வழக்கில் இந்த மனுவுக்குப் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் தமிழக அரசு இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.. அதில் நடிகர்களின் மோசமான நடிப்பு அல்லது பிரபலமான நடிகர்கள் இல்லாமல் போனது உள்ளிட்ட காரணங்களால் மே 7ஆம் தேதி முதல் தியேட்டர் உரிமையாளர்கள் தானாக முன்வந்து படத்தைத் திரையிடுவதை நிறுத்தியுள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள்: மேலும் அதில், "மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் விமர்சனங்கள் / பிரபல நடிகர்கள் இல்லாதது/ பார்வையாளர்களிடம் வரவேற்பு இல்லாமல் போனது/ ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மே 5 முதல் படத்தைத் திரையிடுவதை நிறுத்த முடிவு செய்தனர். இதில் அரசு எந்த விதத்திலும் தலையிடவில்லை. இந்த முடிவைத் திரையரங்கு உரிமையாளர்கள் தாங்களாகவே எடுத்துள்ளனர். இதில் அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மோடி ஓட்டிய கேரளா ஸ்டோரி பிளாப்.. வழிகாட்டிய கர்நாடகா! ரியல் குஜராத் ஸ்டோரி இதான் -முரசொலி தலையங்கம்
படம் வெளியாவதைத் தடுக்க தமிழக அரசு நிழல் தடை விதித்துள்ளதாகத் திரைப்பட தயாரிப்பாளர் கூறிய குற்றச்சாட்டைத் தமிழ்நாடு மறுத்துள்ளது. திரைப்படத்தின் திரையிடலை அரசு நிறுத்தியதற்கான எந்த ஆவணத்தையும் தயாரிப்பாளர்கள் சமர்ப்பிக்கவில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு ஒவ்வொரு மல்டிபிளெக்ஸிலும் போலீஸ் பாதுகாப்பை அளித்தது. படம் திரையிடப்பட்ட 21 திரையரங்குகளின் பாதுகாப்பிற்காக போலீசார் பாதுகாப்புப் பணியில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.