இரவோடு இரவாக டெல்லி பறந்த செந்தில் பாலாஜி.. சந்தித்தது யாரை தெரியுமா? வெளியான போட்டா! பரபர பின்னணி
சென்னை: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.1000 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் நேற்று அவசரஅவசரமாக அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி புறப்பட்டு சென்றார். அதன்பிறகு இன்று காலையில் அவர் சென்னை வந்தார். இரவோடு இரவாக செந்தில் பாலாஜி டெல்லி பறந்து உடனடியாக சென்னை திரும்பிய நிலையில் அவர் யாரை சந்தித்துள்ளார்? அதன் பின்னணி என்ன? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையை செந்தில் பாலாஜி நிர்வகித்து வருகிறார்.
கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 3 நாட்கள் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகளில் இந்த சோதனை என்பது மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனை பற்றி அமலாக்கத்துறை தரப்பில், தமிழ்நாடு டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி வரை முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது செந்தில் பாலாஜிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த விவகாரத்தை பாஜக தீவிரமாக கையில் எடுத்துள்ளது. தமிழக அரசு மற்றும் செந்தில் பாலாஜிக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாஜக சார்பில் சென்னையில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இதில் அண்ணாமலை உள்பட பல பாஜக தலைவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தான் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி அவசரஅவசரமாக சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். நேற்றைய தினம் சட்டசபை கூட்டம் முடிந்தவுடன் செந்தில் பாலாஜி டெல்லி புறப்பட்டார். அதன்பிறகு இன்று அதிகாலையில் அவர் விமானத்தில் சென்னை திரும்பி வந்தார். இந்த ஒருநாள் இரவில் டெல்லிக்கு செந்தில்பாலாஜி ஏன் சென்று வந்தார்? என்பது பற்றி பல்வேறு கேள்விகள் எழுந்தன. செந்தில் பாலாஜியின் டெல்லி பயணம் பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் இல்லை. டாஸ்மாக் மீது ரூ.1,000 கோடி முறைகேடு புகாரை அமலாக்கத்துறை வைத்துள்ள நிலையில் அவர் ரகசியமாக சென்று வந்ததும் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இந்நிலையில் தான் செந்தில் பாலாஜியின் டெல்லி பயணம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது செந்தில் பாலாஜி நேற்று டெல்லி சென்று மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹியை சந்தித்து பேசியுள்ளார். இதுதொடர்பாக ஒரு போட்டோ வெளியாகி உள்ளது. அந்த போட்டோவில் முகுல் ரோத்தஹிக்கு செந்தில் பாலாஜி சால்வை போட்டு அருகில் நிற்கிறார்.
செந்தில் பாலாஜி வழக்கில் முகுல் ரோத்தஹி தான் வாதாடி வரும் நிலையில் அதுதொடர்பாக செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தான் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடைக்கோரி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் மனுத்தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications