வேலைக்கே போகாமல் டிமிக்கி.. ஓயாமல் திட்டிய மனைவி.. தப்பிக்க போலீஸ் அவதாரம் எடுத்த விஜயன்
திண்டுக்கல் : வேலைக்கு போகாததால் மனைவி ஓயாமல் திட்டிக்கொண்டே இருந்நிருக்கிறார். இதனால் மனைவியிடம் இருந்து திட்டு வாங்குவதில் இருந்து தப்பிப்பதற்காக 'குருப் 1ல் பாஸ்.... டிஎஸ்பி ஆகிட்டேன்' என்று பொய் சொல்லியிருக்கிறார் விஜயன். அதன் படியே போலீஸ் துணை கமிஷனராக அவதாரம் எடுத்துள்ளார். போலி போலீஸ் துணை கமிஷனர் விவகாரத்தில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே லட்சுமிபுரம் டோல்கேட்டில் பட்டிவீரன்பட்டி போலீசார் சோதனை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தினார்கள். அதில் இருந்தவர் தன்னை சென்னை போலீஸ் துணை கமிஷ்னர் என்று கூறியதுடன் மிரட்டி உள்ளார்.
சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்த போலீசார் அவரிடம் இருந்த அடையாள அட்டையை பார்வையிட்டதில் அது போலி என தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் இருந்து ஒரு துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. விஜயனை விசாரணை செய்த திண்டுக்கல் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரன் தலைமையில் நிலக்கோட்டை காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் பொறுப்பு ராஜபாண்டி, வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் தனிப்பிரிவு போலீசார், சிபிசிஐடி போலீசார், தீவிர விசாரணை செய்தனர்.

விசாரணை
விசாரணையில் போலி போலீஸ் துணை கமிஷனராக வலம் வந்த சென்னை கொளத்தூர் ஜீவா நகரை சேர்ந்த விஜயன் (42) என்பது தெரியவநதது. அவரை கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறும் போது, விஜயன் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வந்திருக்கிறார். ஆனால் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

திட்டிய மனைவி
வேறு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். இவரது மனைவி கொளத்தூரில் பிளே ஸ்கூல் நடத்தி வருமானம் ஈட்டி வருகிறார். அதில் தான் குடும்பம் இயங்கி வந்துள்ளது. இவர் வீட்டில் வேலை இல்லாமல் இருந்ததால் மனைவி கடுமையாக திட்டிக்கொண்ட இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வேலை தேட முயற்சி செய்திருக்கிறார். ஆனால் வேலை எதுவும் கிடைக்கவில்லை.

போலீஸ் துணை கமிஷ்னர்
மனைவி தொடர்ந்து திட்டிக்கொண்ட இருந்ததால் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு, தன் மனைவியிடம் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று, டிஎஸ்பி ஆனதாக பொய் சொல்லி இருக்கிறார். மேலும் தான் தற்போது போலீஸ் துணை கமிஷனராக உள்ளதாகவும் மனைவியிடம் கூறியுள்ளார்.

போலீஸ் வாகனம்
மனைவியை நம்ப வைப்பதற்காக விஜயன், கோவையில் உள்ள தனது குடும்ப நண்பரான ஜெயமீனாட்சி என்பவரின் பெயரில் ஜீப் வாங்கி இருக்கிறார். அதை போலீஸ் வாகனம் போல ரூ. 2 லட்சம் செலவில் மாற்றி இருக்கிறார்.

சிக்கிய விஜயன்
பின்னர் விஜயன் விசாரணைக்கு வெளியூர் போவதாக மனைவியிடம் கூறிவிட்டு, இந்த ஜீப்பை எடுத்து கொண்டு அடிக்கடி வெளியூர் சென்று வந்துள்ளார். பிறகு வீட்டில் வந்து 10 நாட்கள் ஓய்வு எடுத்திருக்கிறார். பின்னர் திரும்பவும் இதுபோல் விசாரணை என்ற பெயரில் பல ஊர்கள் சுற்றி வந்துள்ளார். தற்போது போலீசாரிடம் வசமாக சிக்கி கொண்டதால் உண்மை வெளிவந்துள்ளது. மனைவிக்கும் உண்மை தெரியவந்துள்ளது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications