அதிகரிக்கும் கொரோனா.. திருச்சி என்.ஐ.டி.யில் கொரோனா சிகிச்சை மையம்.. கலெக்டர் திவ்யதர்ஷினி பேட்டி!
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் கூடுதலாக 300 ஆக்சிஜன் சிலிண்டர் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட உள்ளது என்று மாவட்ட கலெக்டர் எஸ்.திவ்யதர்ஷினி கூறினார்.
திருச்சி என்.ஐ.டி.யில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

கலெக்டர் ஆய்வு
அரசு நிதித்துறை சிறப்பு செயலாளரும், கொரோனா பரவல் தடுப்பு மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான ரீட்டாஹரீஸ்தக்கர் நேற்று திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரி மற்றும் மாநகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். திருச்சி மாநகரில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட வயலூர் சாலை சீனிவாசன் நகர், சாலை ரோடு, லிங்கம் நகர் பகுதிகளுக்கு சென்றும் ஆய்வு செய்தார்.

சிறப்பு முகாம்கள்
திருச்சி மாவட்டத்தில் திருச்சி அரசு மருத்துவமனை தவிர காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம், சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி, புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி, ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ், புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி ஆகிய இடங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.

அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்.ஐ.டி) கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை நேற்று கொரோனா பரவல் தடுப்பு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ரீட்டா ஹரீஸ் தக்கர், கலெக்டர் திவ்யதர்ஷினி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தடைசெய்யப்பட்ட பகுதியில் தூய்மைப் பணி மேற்கொள்ளவும், கிருமிநாசினி தெளிக்கவும், சுகாதாரத்துறை அலுவலா்களுக்கு அவர்கள் அறிவுறுத்தினாா்.

மக்கள் பதட்டமடைய வேண்டாம்
பின்னர் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: திருச்சி மாவட்டத்தில் தற்போது தினமும் 6 ஆயிரம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. திருச்சி அரசு மருத்துவமனையில் 400 ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் கூடிய படுக்கை வசதி உள்ளது. அங்கு மேலும் 200 ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட இருக்கிறது. இதேபோல மணப்பாறை, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைகளிலும் தலா 50 ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்தி தரப்படும். எனவே பொது மக்கள் பதட்டமடைய தேவையில்லை.

புகார்கள் ஏதும் இல்லை
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கிராமங்களை விட மாநகர பகுதியில் தான் அதிகளவில் கொரோனா பாதிப்பு உள்ளது. மாநகராட்சி பகுதியில் மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 26 உள்ளன. 12 பகுதிகள் புறநகரில் உள்ளன. பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம். அரசின் நெறிமுறைகளை பின்பற்றினால் கொரோனாவின் பிடியில் இருந்து தப்பிக்கலாம். திருச்சியில் தனியார் ஆக்சிஜன் சிலிண்டர் விற்பனை செய்வதாக புகார் எதுவும் இதுவரை வரவில்லை. புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications