அஸ்வின் செய்த அந்த தப்பு.. கேகேஆர் பைனலுக்குள் சென்றது எப்படி.. கவாஸ்கர் ஆதங்கம்
துபாய்: அஸ்வின் தவறாக கணித்து விட்டதால்தான் கேகேஆர் ஐபிஎல் பைனலுக்குள் செல்ல முடிந்தது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சார்ஜாவில் நேற்று நடைபெற்ற குவாலிபையர்-2 சுற்று போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த டெல்லி 135 ரன்கள் மட்டுமே அடித்ததால், எளிதாக கொல்கத்தா வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொல்கத்தா பேட்டிங் கடைசி நேரத்தில் சீட்டுக் கட்டுப் போல சரிந்தது.

திடீர் சரிவுகள்
இதனால் 19 ஓவர்கள் முடிவில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 129 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், சகிப் அல் ஹசன் மற்றும் அடுத்த பந்திலேயே நரைன் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின். இதனால் டெல்லி வெற்றி பெறும் அளவுக்கு நிலைமை சென்றது. ஆட்டம் பரபரப்பாக மாறியது.

சிக்சர்
நரைன் கேட்ச் கொடுத்து அவுட்டாகியிருந்தார். எனவே ஏற்கனவே மறுமுனையில் நின்ற ராகுல் திரிபாதி ஸ்ட்ரைக்கர் என்ட் பகுதிக்கு ஓடிவிட்டார். எனவே அடுத்த பந்தை அதாவது ஓவரின் 5வது வந்தை திரிபாதி சந்தித்தார். அந்த பந்தில் திரிபாதி சிக்சர் விளாசினார். இதையடுத்து கொல்கத்தா வெற்றி பெற்றது. இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
Recommended Video

சுனில் கவாஸ்கர் கருத்து
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் அளித்துள்ள பேட்டியில், அஸ்வின் புத்திசாலித்தனமான பவுலர். எந்த பேட்ஸ்மேனுக்கு எந்த இடத்தில் பந்தை வீச வேண்டும் என்பது அவருக்கு தெரியும். பேட்ஸ்மேன் என்ன நினைப்பார் என்பதை அஸ்வின் நன்கு தெரிந்து வைத்திருப்பார். சுனில் நரைன் பிட்சை விட்டு இறங்கி வருவார் என்று நினைத்துதான் அஸ்வின் பந்து வீசினார். அதே போல நரைன் இறங்கி வந்து அடித்ததால் பவுண்டரி எல்லையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

ஷாட் பால்
திரிபாதியும் பிட்சை விட்டு இறங்கி வந்து, இறங்கி அடிப்பார் என்று நினைத்து அஸ்வின் பிளாட்டாக பந்தை ஷாட் பிட்ச் பந்தாக வீசினார். ஆனால் திரிபாதி நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தார். எனவே அவருக்கு பந்தை கணிக்க நன்கு நேரம் கிடைத்தது. சிக்சர் அடித்து விட்டார். திரிபாதிக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.

ஸ்ரீகாந்த் கருத்து
இதனிடையே, கமெண்டரியில் பேசிக் கொண்டிருந்த ஸ்ரீகாந்த், அஸ்வின் வழக்கம்போல பந்து வீசியிருக்க வேண்டும். வேகமாக பந்து வீசுவதை தவிர்க்க வேண்டும் என்று ஆரம்பம் முதலே கமெண்ட் செய்து கொண்டிருந்தார். பந்தை பிளாட்டாக வேகமாக வீசி வந்தார் அஸ்வின். இதனால் பந்து ஸ்பின் ஆகவில்லை. இவ்வாறு செய்வது அஸ்வின் பந்து வீச்சுக்கு பலன் தராது என்று ஸ்ரீகாந்த் திரும்ப திரும்ப கூறி வந்தார். அதேநேரம், இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அஸ்வின் தொடர்ந்து சிறப்பாகவே பந்து வீசியுள்ளார். ஐபிஎல் தொடரில் 51 முறை இடது கை பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அவர். ஆனால் வெங்கடேச ஐயர், இடது கை பேட்ஸ்மேன் என்ற போதிலும், அஸ்வினை சிறப்பாக எதிர்கொண்டார். ஆனால் பிந்தைய ஓவர்களில் அஸ்வின் சற்று சுதாரித்துக் கொண்டு வெங்கடேச ஐயரை கட்டுப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications