பொருளாதாரம் + அவமானம் + தோல்வி! 0% என கணிப்பு - 100% உழைப்பு.. பீனிக்ஸ் பறவையாக பீறிட்டு வந்த இலங்கை
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தான் அணியைவிட குறைத்து மதிப்பிடப்பட்ட இலங்கை அணி இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஜாம்பவான்களை வீழ்த்திய கோப்பையை கைப்பற்றி பீனிக்ஸ் பறவையாக மறு பிறவி பெற்று இருக்கிறது.
கிரிக்கெட்டில் தலைசிறந்த 10 அணிகளில் ஒன்றாக இருந்து வருவது இலங்கை அணி. குறிப்பாக டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 12 அணிகளில் 5 அணிகள் இந்திய துணை கண்டத்துக்கு உட்பட்டவை. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள்தான் அவை.
இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் உலகக்கோப்பையை வென்றிருக்கின்றன. ரனதுங்கா காலம் தொடங்கி அட்டப்பட்டு, ஜெயசூர்யா, முரளிதரன், ஜெயவர்தனே, சங்ககரா, தில்சான், சமிந்தா வாஸ், மலிங்கா என பல ஜாம்பவான்களால் சர்வதேச அரங்கில் முக்கிய அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது இலங்கை அணி.

முக்கிய வீரர்கள் ஓய்வு
குறிப்பாக 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை, 2011 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டிகளை தொடர்ந்து 2 முறை இறுதிப் போட்டிக்கு நுழைந்த பெருமை இலங்கை அணிக்கு உள்ளது. அந்த அளவு தலைசிறந்த வீரர்கள் இலங்கை அணியில் இருந்தனர். ஆனால், ஜெயவர்தனே, சங்ககரா, தில்சன் ஆகியோரின் ஓய்வுக்கு பிறகு இலங்கை அணி தடுமாற்றத்தை சந்தித்தது.

தடுமாறிய இலங்கை
வீரர்கள் தேர்வு, கிரிக்கெட் சங்க அரசியல் போன்றவற்றால் ஒரு கட்டத்தில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளிடம் வெல்வதற்கு கூட தடுமாறியது அந்த அணி. கடைசியாக ஓய்வுபெற்ற மலிங்கா கூட இலங்கை அணி வீரர்களை விமர்சித்துவிட்டே சென்றார். இரு தரப்பு தொடர்கள், ஐசிசி தொடர்கள் என எதிலும் இலங்கை அணியால் சோபிக்க முடியவில்லை.

கஷ்டகாலம்
கடைசி 5 ஆண்டுகள் இலங்கை அணிக்கு கஷ்டகாலமாகவே இருந்து வந்தன. இலங்கை அணியின் கிரிக்கெட் ரசிகர்களும் இதனால் தொய்வடைந்தனர். வாழ்ந்துகெட்ட குடும்பமாக ஜிம்பாப்வே போன்ற அணியைபோல் இலங்கை மாறிவிடுமோ என்று பலரும் கணித்தனர். நேற்று நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இலங்கையை நடத்தவே முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இலங்கை அரசியல் நெருக்கடி
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரால் மீண்டும் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் எழுச்சி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக அங்கு அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு நாடே நிலையற்ற நிலைக்கு மாறியது. இதனால் கடைசி நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தொடர் மாற்றப்பட்டது.

சாதித்த இலங்கை
இந்த தொடரில் இந்திய அணியே அதிக வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சூப்பர் 4 சுற்றிலிருந்து இந்தியா வெளியேறியவுடன் பாகிஸ்தான் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால், அனைத்து எதிர்பார்ப்புகளையும் தகர்த்து எரிந்து நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என்று பீனிக்ஸ் பறவைபோல் பீறிட்டு கோப்பையை தட்டிச் சென்றுள்ளது இலங்கை.

தகர்ந்த கணிப்புகள்
ஆசிய கோப்பை தொடக்கத்தில் யார் கோப்பையை வெல்வார்கள் என்ற கருத்துக்கணிப்பு ரசிகர்களிடம் எடுக்கப்பட்டது. அதில் இந்தியா 69%, ஆப்கானிஸ்தான் 19%, பாகிஸ்தான் 12%, இலங்கை 0% என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. இந்த அளவுக்கு நாங்கள் மோசமில்லை என்று தங்கள் சிறப்பான கூட்டு முயற்சியால் பதிலடி கொடுத்து இருக்கிறது இலங்கை.

புதிய படை
ஜெயவர்தனே, சங்ககரா தலைமையில் எப்படி 10 ஆண்டுகளுக்கு முன் சர்வதேச அரங்கில் சாதித்த இலங்கை படையின் புதிய வெர்சனாக மாறி இலங்கை ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்து சென்றுள்ளது சனகா தலைமையிலான ஹசரங்கா, குசல் மெண்டிஸ், நிசான்கா, ராஜபக்சா என அடுத்த தலைமுறை இலங்கை படை. போரால் நிம்மிதியிழந்த இலங்கை மக்களுக்கு தங்கள் வெற்றியால் ஆறுதல் கொடுத்துள்ளார்கள் இந்த வீரர்கள்.












Click it and Unblock the Notifications