"ஓபிஎஸ் அரசியல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது" ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை பற்றி செங்கோட்டையன்!
ஈரோடு: ஓபிஎஸ் செய்த அரசியல் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அதிமுக- சார்பில் வெள்ளை நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ-வுமான செங்கோட்டையன் கலந்துகொண்டார் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

செங்கோட்டையன் பேட்டி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் கூறுகையில், அதிமுக ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் பணிகளை செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக அந்தியூர் பகுதியில் வெள்ளம் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.

அத்திக்கடவு - அவினாசி திட்டம்
அந்தியூர் பகுதியில் தமிழக அமைச்சர்கள் பார்வையிட்டு உள்ளனர். அதனால் உடனடியாக நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். அத்திக்கடவு - அவினாசி திட்டப் பணிகளை வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு இருக்கிறார். உடனடியாக அதனை நிறைவேற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

வேண்டுகோள்
தற்போது வெள்ளம் இரண்டரை லட்சம் கன அடி தண்ணீர் வெளியேறிக் வீணாகிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் திட்டம் முடிந்திருந்தால், வறட்சி பகுதிகளை நல்ல வளமான பகுதிகளாக மாற்றி இருக்க முடியும். இன்னும் ஒரு மாத காலத்திற்குள் இப்பணிகளை முடித்து வறட்சிப் பகுதிகளுக்கு இந்த தண்ணீரை வீணாக கடலில் கலக்காமல் கொண்டு செல்ல வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

ஓபிஎஸ் பற்றி கருத்து
தொடர்ந்து ஓபிஎஸ் விடுத்த சவால் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, எங்களைப் பொறுத்தவரை ஓபிஎஸ் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் எங்கிருந்து பேசுகிறார், எதற்காக பேசுகிறார் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனிக்கும் போது, ஓபிஎஸ் எப்படி அரசியல் செய்தார் என்பதை நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் வெளிச்சத்தில் வந்துள்ளது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications