அமைச்சர் பொய் சொல்றாரு.. பாஜக செலவில் குஜராத்துக்கு கூட்டிட்டு போக நாங்க ரெடி.. அண்ணாமலை பரபர!
ஈரோடு : குஜராத் அமுல் பால் நிறுவனத்திற்கு எங்கள் செலவில், தமிழக அமைச்சர்களை அழைத்துச் சென்று, அந்த நிறுவனம் எப்படி லாபகரமாக இயங்குகிறது என காட்டுவதற்கு தயார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
பால் விலை உயர்வைக் கண்டித்து ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை, ஆவின் நிறுவனத்துக்கு நாள் ஒன்றுக்கு 4 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் குறைந்துள்ளது. இதனை மறைத்த அமைச்சர் நாசர் 43 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் ஆவதாக பொய் கூறுகிறார் என விமர்சித்துள்ளார்.

இதுதான் திமுக சாதனை
பால் விலை உயர்வைக் கண்டித்து பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை, "கடந்த 16 மாத கால திமுக ஆட்சியில் விலை உயர்வு மட்டுமே சாதனையாக உள்ளது. தமிழக முதல்வருக்கு விளம்பர மேனியா நோய் வந்துள்ளது. எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது வயல்வெளியில் கான்கிரீட் சாலை அமைத்து பார்வையிட்ட ஸ்டாலின், தற்போது வயல்வெளியில் சிவப்புக் கம்பளம் விரித்து மழை சேதத்தைப் பார்வையிடுகிறார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மண் திருட்டு, கனிம வளங்கள் திருட்டு அதிகரித்துள்ளது.

அமைச்சர் பொய் சொல்கிறார்
தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி விட்டு, பால் விற்பனை விலையை 12 என உயர்த்துவதுதான் திராவிட மாடல்.
கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்த ஆவின் தற்போது 32 லட்சம் லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்கிறது. ஒரு நாளுக்கு 4 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் குறைந்துள்ளது. ஆனால், பால்வளத்துறை அமைச்சர் நாசர், நாள் ஒன்றுக்கு 43 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் ஆவதாக பொய் சொல்கிறார். திவால் ஆன ஆவின் நிறுவனத்தை, கமிஷன், கொள்ளைக்காக நடத்துகின்றனர்.

எங்கள் செலவில்
குஜராத்தில் செயல்படும் அமுல் கூட்டுறவு நிறுவனம், தனது வருவாயில் 82 சதவீதத்தை அங்குள்ள விவசாயிகளுக்கு வழங்குகிறது. ஆனால், ஆவின் நிறுவனம் ஊழல் காரணமாக நஷ்டத்தில் இயங்குகிறது. குஜராத் அமுல் பால் நிறுவனத்திற்கு எங்கள் செலவில், அமைச்சர்களை அழைத்துச் சென்று, அந்நிறுவனம் எப்படி லாபகரமாக இயங்குகிறது என காட்டுவதற்கு தயாராக உள்ளோம். அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஆரஞ்ச் கலர் பால் லிட்டர் ரூ. 46-க்கு விற்கும்போது, ஆவின் அதே வகை பாலை ரூ 60-க்கு விற்கிறது.

கோமாளித்தனம்
பால் விலை உயர்வால் விற்பனை குறைந்துள்ளது என்றதும், அதனை காய்ச்சி உருக்கி விடுங்கள், பொங்கலுக்கு நெய்யாக விற்று விடலாம் என அமைச்சர் சொல்கிறார். இதுபோன்ற கோமாளித்தனமான அரசை பார்த்ததில்லை. கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு 'KGF 1' என்றால், இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு 'KGF 2' போல் அதைவிட பயங்கரமாக இருக்கும்.

மோடி என்னிடம் சொன்னார்
பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது, இரண்டு கிலோ மீட்டர் தூரம், காரில் நின்றவாறு பொதுமக்களின் வரவேற்பை ஏற்றார். தமிழகத்திற்கு வரும்போது, தேசியம் கலந்த ஆன்மிக உணர்வு வருவதாகவும், கொட்டும் மழையில் கைக்குழந்தையுடன் சகோதரிகள் வரவேற்பு கொடுத்தது கண்ணீரை வரவழைத்ததாகவும் பிரதமர் மோடி என்னிடம் தெரிவித்தார். நமது முதல்வர், பிரதமர் மோடி போல் ஆக ஆசைப்படுகிறார்.

மோடியின் நகத்திற்கு கூட
ஸ்டாலின், பிரதமர் மோடி போல் ஆக வேண்டுமென்றால், 21 ஆண்டுகளில் ஒருநாள் கூட விடுமுறை எடுக்கக் கூடாது. எந்த காரியத்திலும், குடும்ப உறுப்பினர்களை பக்கத்தில் விடக் கூடாது. கை சுத்தமாக இருக்க வேண்டும். ஆனால், தமிழக முதல்வரைச் சுற்றி, டார்கெட் அமைச்சர்கள்தான் உள்ளனர். எனவே, கனவில் கூட மோடியின் நகத்திற்கு கூட தமிழக முதல்வர் ஈடாக முடியாது.

லவ் டுடே பார்க்கும் முதல்வர்
தமிழகத்தில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களையும், முதல்வர் மகன் உதயநிதியின் நிறுவனம் பிடுங்கி வெளியிடுகிறது. சென்னை மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது மகன் வெளியிட்டுள்ள 'லவ் டுடே' படத்தை மனைவியுடன் முதல்வர் பார்த்துள்ளார். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, நமது செல்போன்களை மாற்றிக் கொள்ளலாமா என முதல்வரின் மனைவி கேட்டதாகவும், அதற்கு முதல்வர் மறுப்பு தெரிவித்ததாகவும் உதயநிதி தெரிவித்துள்ளார். மனைவியிடம் செல்போனை நம்பி கொடுக்க முடியாதவரிடம், தமிழகத்தை நம்பி கொடுத்ததன் பலனை தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்." எனப் பேசியுள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications