ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி... கடனுக்கான கொடுத்த நிலத்தை திருப்பித் தரவில்லை என புகார்
ஈரோடு : வீடு கட்டுவதற்காக கடனுக்காக கொடுத்த நிலத்தை திருப்பித் தரவில்லை எனக்கூறி ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் இரும்பு வியாபாரி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க குடும்பத்தோடு வந்தவர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்க முயன்றார். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், அதிகாரிகள் அவர் மீது உடனடியாக தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரை காப்பாற்றிய சூரம்பட்டி போலீசார் அவரை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றனர்.

வீடு கட்டுமானத்திற்கு கடன்
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த காலிங்கராயன் பாளையத்தில் வசித்து வருபவர் சக்திவேல். இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும் மகனும் உள்ளனர். இரும்பு வியாபாரி சக்திவேலுக்கு காலிங்கராயன் பாளையம் ஆற்றங்க கரையோரம் 6 சென்ட் நிலம் உள்ளது. அதில் வீடு கட்ட முடிவெடுத்த சக்திவேல் முதலில் தான் சேமித்து வைத்திருந்த பணத்தில் வீடு கட்டத் தொடங்கி உள்ளார். வீட்டின் கட்டுமானப் பணிகள் 85 சதவீதம் முடிவடைந்த நிலையில் இதர பணிகளுக்கு 3.80 லட்சம் ரூபாய் வரை சக்திவேலுக்கு தேவைப்பட்டது. இதை அடுத்து உறவினர்கள் நண்பர்களின் உதவியை எதிர்பார்த்த சக்திவேலுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

நிலத்தை கிரையம் செய்து கடன்
இந்நிலையில் உதவி என்ற பெயரில் பிரச்சனை சக்திவேலின் வீட்டுக் கதவை தட்டியது. அதே பகுதியை சேர்ந்த நிலத் தரகர் ஒருவர் வீடு கட்டுவதற்கு பணம் தருவதாக சக்திவேலிடம் கூறியுள்ளார். ஆனால் பணத்திற்கு பதிலாக நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கவேண்டும் என்றும், வாங்கிய கடனை முறையாக செலுத்திய பின் மீண்டும் நிலத்தை சக்திவேல் பெயருக்கு எழுதி தந்துவிடுவதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதை நம்பிய சக்திவேல் நிலத்திற்கான கிரையப் பத்திரத்தை அந்த தரகர் பெயருக்கு எழுதி கொடுத்துவிட்டு கடன் வாங்கி வீட்டின் இதர கட்டுமானப் பணிகளை முடித்துள்ளார். இந்நிலையில் வாங்கியக் கடனையும் திருப்பி செலுத்தாத சக்திவேல், நிலத்தை மீண்டும் தன் பெயருக்கே எழுதி வைக்குமாறும், 3 மாதத்தில் கடனை திருப்பி செலுத்திவிடுவதாகவும் கேட்டுள்ளார்.

அடமான நிலத்தை தரவில்லை
ஆனால் மீண்டும் நிலத்தை அவர் பெயருக்கு மாற்றிவிட்டால் எப்படி வசூலிப்பது என்று யோசித்த தரகர் மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது. இந்த பிரச்சனை பல மாதங்களாக நீடிக்க சக்திவேல் அந்த தரகர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் சக்திவேல் தனது மனைவி தனலட்சுமி மற்றும் மகனுடன் ஈரோடு ஆட்சியர் அலுவலகம் வந்தார். அங்கே குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் வழக்கத்தை விட கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தற்கொலைக்கு முயற்சி
குறைதீர் கூட்டம் அருகே சென்ற சக்திவேல், திடீரென தான் கொண்டு வந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டார். இதை பார்த்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்து அவரிடம் நெருங்கினர். ஆனால் அவர் காவலர்களிடம் விலகிச் சென்று கையில் இருந்த தீப்பெட்டியை எடுத்து பற்ற வைக்க முயன்றார். ஆனாலும் போலீசார் அவர் மீது தண்ணீயை ஊற்றி தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். இதையடுத்து காவல்துறையினரிடம் குறையை தெரிவித்த சக்திவேல், மேற்கண்ட விஷயங்களை கூறி ஏமாற்றி வாங்கிய நிலத்தை மீண்டும் என் பெயரில் மாற்றி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பின்னர் சூரம்பட்டி போலீசார் சக்திவேலை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications