”வாக்களித்த மக்களை கசக்கிபிழிவது தான் திராவிட மாடலா?” ஈரோட்டில் சீறிய சசிகலா!
ஈரோடு: வாக்களித்த மக்களை கசக்கிபிழிவது தான் திராவிட மாடல் ஆட்சியா என்று மின் கட்டண உயர்வு குறித்து சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் தீவிரமாகி உள்ள நிலையில், அவருக்கு சவால் அளிக்கும் வகையில் ஓ பன்னீர் செல்வம் விரைவில் டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சசிகலா கொங்கு மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி கடந்த 2 நாட்களாக அவர் சேலத்தில் சுற்று பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வழியாக நேற்று இரவு ஈரோட்டுக்கு சசிகலா வந்தார். அவருக்கு ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் திரண்டு நின்றிருந்த ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சசிகலா பேச்சு
இதனைத்தொடர்ந்து ஆதரவாளர்கள் மத்தியில் சசிகலா பேசுகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஏழை, எளிய, சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்கள். ஆனால், இந்த திட்டங்களுக்கு எப்படி மூடு விழா நடத்துவது என்று திமுக செயல்படுகிறது.

விரைவில் பேருந்து கட்டணம்
கடந்த 15 மாதகால ஆட்சியில் தமிழக மக்களை பாதிக்கும் வகையில் சொத்து வரி 150 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. மின் கட்டண உயர்வு பேரதிர்ச்சியை தமிழக மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் விரைவில் பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட உள்ளது.

இதுதான் திராவிட மாடலா?
வாக்களித்த மக்களை கசக்கி பிழிவது தான் திராவிட மாடலா. இதுபோன்ற சிந்தனையை எந்த திராவிட தலைவர்களும் விட்டு சென்றதில்லை. ஜெயலலிதா மறைவின் காரணமாக துர்பாக்கிய நிலையில் இருக்கிறோம். இதனால் என் மனது வேதனை அடைகிறது. இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர, இயக்கம் ஒற்றுமையுடன் வலிமையோடு இருக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.

ஒன்றிணைவோம்
தமிழக மக்கள் நல்ல முடிவு எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. மக்கள் விரோத ஆட்சியா, ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியா என்பதை வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப ஒன்றிணைவோம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications