கீழ்பவானி கால்வாயிலும் கட்டுமானம் வீக்.. உடைந்து ஓடிய தண்ணீர்.. வெள்ளத்தில் மிதக்கும் 5 கிராமங்கள்
ஈரோடு: ஈரோடு அருகே மலைப்பாளையத்தில் கீழ்பவானி கால்வாய் உடைந்து 5 கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. கால்வாய் உடைந்து வெள்ளம் வெளியேறியதில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
கீழ்பவானி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. அவசரகதியில் தரமற்ற முறையில் கட்டுமான பணிகள் நடைபெற்றதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னை புளியந்தோப்பு அடுக்குமாடி கட்டிடம் தரமற்றதாக கட்டப்பட்டதால், தொட்டாலே உதிரும் வகையில் அவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக இந்த விவகாரம் கிளம்பியுள்ளது. இன்னொரு பக்கம், தரமற்ற கட்டிடம் கட்டியதற்காக பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஒப்பந்ததாரர் தவறு செய்திருந்தால், அவரையும் பிளாக் லிஸ்டில் சேர்ப்போம் என்று தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் இப்படி ஒரு கட்டுமான விவகாரம் உலுக்கி வரும் நிலையில், ஈரோடு அருகே மலைப்பாளையத்தில் கீழ்பவானி கால்வாய் உடைந்து 5 கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. மலைப்பாளையம், கரையக்காடு, கண்ண வேலம்பாளையம், நெல்வயல், வரவங்காடு கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. கால்வாய் உடைந்து வெள்ளம் வெளியேறியதால் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
கடந்த 6 மாதமாக, கரைகளை பலப்படுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், விரிசல் ஏற்பட்டதால் தண்ணீர் கிராமங்களுக்குள் பாய்ந்துள்ளது. எனவே, கரைகள் முழுமையாக பலமாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து விட்டு பிறகு தண்ணீரை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications