ஈரோடு மாநகராட்சியில் குறைகள் இருக்கிறது! ஒளிவு மறைவின்றி ஒப்புக்கொண்ட அமைச்சர் முத்துசாமி!
எதையும் மறைக்காமல் யதார்த்த நிலையை பேசிய அமைச்சர் முத்துசாமி
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் சில குறைபாடுகள் இருப்பதாக அமைச்சர் முத்துசாமி ஒளிவு மறைவின்றி ஒப்புக் கொண்டுள்ளார்.
ஈரோடு மாநகராட்சியில் நிலவும் பிரச்சனைகளை தீர்க்க ஏற்கனவே முதலமைச்சர் 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதாகவும் பணிகள் முடிவடைய இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுவதாகவும் கூறினார்.
திருமகன் ஈவெராவை பொறுத்தவரை எல்லோரிடமும் சிரித்த முகத்துடன் நட்பாக பழகக்கூடியவர் என்பதால் அவரது மறைவை ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களால் ஜீரணிக்கமுடியவில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.
செயல்வீரர்கள் கூட்டம்
ஈரோடு கிழக்குத் தொகுதியில் செயல்வீரர்கள் கூட்டத்தை மிகப் பிரம்மாண்டமாக நடத்தி முடித்த அமைச்சர் முத்துசாமி அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூறிய அவர், திருமகன் ஈவெரா மறைந்து 14 நாட்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றும் ஓட்டுக் கேட்டு செல்லும் இடங்களில் எல்லாம் திருமகன் ஈவெரா மறைவை சொல்லி சொல்லி தாய்மார்கள் மிகுந்த துயரப்படுவதாகவும் தெரிவித்தார். இவ்வளவு இளம் வயதில் திருமகன் மறைந்துவிட்டாரே என வாக்காளர்கள் வருத்தம் தெரிவிப்பதாக கூறினார்.
சிரித்த முகம்
திருமகன் ஈவெராவை பொறுத்தவரை சிரித்த முகத்துடன் எல்லோரிடமும் அன்பாக பாசமாக நடந்துக் கொள்ளக் கூடியவர் என்றும் தன்னை சந்திக்க வந்த பொதுமக்களிடம் அவர் முகம் சுளித்ததே கிடையாது எனவும் முத்துசாமி தெரிவித்தார். அவர் விட்டுச் சென்ற பணிகளை, ஈரோடு கிழக்குக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என திருமகன் ஈவெரா நினைத்தாரோ, அவற்றையெல்லாம் ஈவிகேஎஸ் இளங்கோவன் நிச்சயம் செய்வார் என உறுதியளித்தார்.
யதார்த்த மனிதர்
ஈவிகேஎஸ் இளங்கோவனை பொறுத்தவரை அவர் ஒரு யதார்த்த மனிதர் என்றும் வெற்றிபெறுவது உறுதி எனவும் அமைச்சர் முத்துசாமி கூறினார். இதனிடையே ஈரோடு மாநகராட்சியில் சில குறைபாடுகள் இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள் என்றும் அதை முதலமைச்சரின் கவனத்துக்கு ஏற்கனவே தாம் கொண்டு சென்றிருப்பதாகவும் தெரிவித்தார். திருமகன் ஈவெரா இருந்த போதே ஈரோடு மாநகர வளர்ச்சிக்கு அரசு 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததாக தெரிவித்தார்.
கால அவகாசம்
ஈரோடு மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் முடிவடைய இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்தார். மாநகராட்சியில் நிலவும் குறைபாடுகளை மூடி மறைக்க விரும்பாமல் அதை ஒப்புக் கொண்ட அமைச்சர் முத்துசாமியின் துணிவு குறிப்பிடத்தக்கது.