இதுலாம் வெட்கக்கேடு.. அரசியல்னா என்ன தெரியுமா? சந்திரபாபு நாயுடுவை விளாசிய ஜெகன்மோகன் ரெட்டி!
ஹைதராபாத்: சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட 8 பேர் கூட்ட நெரிசலால் வடிகாலில் விழுந்து பலியான நிலையில், ஷூட்டிங் நடத்துவதும் கேமராக்களுக்கு போஸ் கொடுப்பதும் அரசியல் அல்ல.. அரசியல் நலனுக்காக 8 பேரை சந்திரபாபு நாயுடு கொன்றுவிட்டதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், அனைத்து தரப்பு மக்களிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதுதான் அரசியல் எனவும் ஜெகன் மோகன் ரெட்டி பேசினார்.
ஆந்திர மாநிலத்தில் வரும் 2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கும் மேல் இருந்தாலும் தற்போதே அங்கு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
"நம் மாநிலம் ஏன் இந்த விதியை எதிர்கொள்கிறது?" என்ற கோஷத்துடன் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திர பாபு நாயுடு ஆந்திராவில் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

கால்வாய்க்குள் விழுந்தனர்
தனது யாத்திரையின் ஒரு பகுதியாக கந்துகூர் நகரத்தில் உள்ள நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்ற இருந்தார். சந்திரபாபு நாயுடுவை காண அங்கு திரண்டு இருந்த அக்கட்சி தொண்டர்கள் முண்டியடித்தனர். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால் சிலர் அங்குள்ள வடிகால் கால்வாய் மீது நின்றுகொண்டிருந்தனர். மக்கள் அதிக அளவில் நின்றதால் பாரம் தாங்காமல் வடிகால் கால்வாயின் மேல்பகுதி உடைந்தது. இதில் கால்வாய்க்குள் பலர் விழுந்தனர்.

சந்திரபாபு நாயுடுவை விமர்சித்த ஜெகன்மோகன்
இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசியல் ரீதியாகவும் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. உடனடியாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.24 லட்சம் நிவாரண உதவியை சந்திரபாபு நாயுடு அறிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அரசியல் நலனுக்காக 8 பேரை கொன்றுவிட்டார்
நரசிப்பட்டனம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது:- தனது அரசியல் நலனுக்காக 8 பேரை சந்திரபாபு நாயுடு கொன்றுவிட்டார். இது மிகவும் கொடூரமானது..வெட்கக்கேடானது. போட்டோஷூட்டிற்காகவும் டிரோன் ஷூட்டிற்காகவும் பெருமளவில் கூட்டத்தை காட்ட வேண்டும் என்ற திட்டத்துடன் குறுகலான இடத்திற்குள் மக்களை சிலர் தள்ளி விட்டு இருக்கின்றனர். பேரிக்காடுகளையும் இதற்காக பயன்படுத்தி 8 பேரை கொன்றுவிட்டனர்.

பப்லிசிட்டிமேனியா உள்ளது
இதைவிட கேவலமானது எதுவும் உண்டா? கடந்த 2015 ஆமாண்டு கோதவரி புஷ்கர விழாவில் 29 பேர் உயிரிழப்புக்கு இவர்தான் காரணமாக இருந்தார். சந்திரபாபு நாயுடுவிற்கு இது ஒன்றும் புதிது அல்ல. அவருக்கு விளம்பரத்த்தில் மட்டுமே அக்கறை காட்டுவார். அவருக்கு பப்லிசிட்டிமேனியா உள்ளது. ஷூட்டிங் மட்டுமே அரசியல் அல்ல. உரையாற்றுவதும் ட்ரோன்களில் படம் எடுப்பதும் டிராமா போடுவதும் அரசியல் கிடையாது. விவசாயிகள், சமூகத்தில் பின் தங்கிய மக்களின் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதே அரசியல் ஆகும். ஆட்சி நிர்வாகத்தில் மாற்றத்தை கொண்டு வருவதும் நமது சுகாதார அமைப்பில் மாற்றத்தை கொண்டு வருவதும் மக்களை அணுகுவதுமே அரசியல் ஆகும்" என்றார்.












Click it and Unblock the Notifications