நாட்டிலேயே முதல் மாநிலம்.. இனி எந்த கட்டுப்பாடும் இல்லை.. ஊரடங்கை முழுமையாக வாபஸ் பெறும் தெலங்கானா
ஹைதராபாத்: நாட்டிலேயே முதல் மாநிலமாக தெலங்கானா மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு முழுவதுமாக வாபஸ் பெறப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா பரவல் தற்போது தான் மெல்லக் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த மே மாதம் நான்கு லட்சம் வரை சென்ற கொரோனா பாதிப்பு இப்போது தான் ஒரு லட்சத்திற்கும் கீழாகக் குறைந்துள்ளது.
அதேபோல உயிரிழப்புகளும் கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை அனைத்து மாநிலங்களும் மெல்ல நீக்கி வருகின்றன.
தெலங்கானா
இந்நிலையில், அதிரடி நடவடிக்கையாக தெலங்கானா மாநிலத்தில் கொரோனா ஊரடங்கை முற்றிலுமாக வாபஸ் பெற அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. நாளை காலை முதல் மாநிலத்தில் அனைத்து கட்டுப்பாடுகளும் வாபஸ் பெறப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஊரடங்கு வாபஸ்
கொரோனா பரவலின் 2ஆம் அலை குறையத் தொடங்கியுள்ள நிலையில் தெலங்கானா அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. அதன்படி ஊரடங்கின் போது விதிக்கப்பட்ட அனைத்து வகையான விதிகளும் கட்டுப்பாடுகளும் வாபஸ் பெறப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மருத்துவ வல்லுநர்கள் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அரசு அறிவிப்பு
இது குறித்து தெலங்கானா அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஊரடங்கு முழுவதுமாக நீக்க மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை, பாசிட்டிவ் ரேட் குறைந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பரவல் முழுவதுமாக கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனா ஊரடங்கு மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கக் கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என அதில் கூறப்பட்டுள்ளது.
கல்வி நிலையங்கள்
வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் மாநிலத்தில் கல்வி நிலையங்கள் திறக்கப்படும் என்றும் அதற்குத் தேவையான நடவடிக்கைகளைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றும் அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டுவிட்டதால் மக்கள் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்றும் மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற கொரோனா வழிகாட்டுதல்களை மக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
தெலங்கானா ஊரடங்கு
கொரோனா 2ஆம் அலை அதிகரித்ததைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களைப் போலவே தெலங்கானாவிலும் கடந்த மே 12ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா குறையத் தொடங்கியதும், கடந்த ஜூன் 9 ஆம் தேதி ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, ஊரடங்கு நேரமும் குறைக்கப்பட்டது. இந்நிலையில், நாளை காலை முதல் ஊரடங்கு முற்றிலுமாக வாபஸ் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.