"திராவிட இயக்கம் இல்லாமல் இருந்திருந்தால் பெண்கள் படித்து இருக்க மாட்டாங்க" - எ.வ வேலு
திருப்பத்தூர்: வாணியம்பாடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ வேலு, திராவிட இயக்கம் இல்லாமல் இருந்திருந்தால் பெண்கள் படித்திருக்க மாட்டார்கள் என்று பேசினார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி வளாகத்தில் வருவாய் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ வேலு கலந்துகொண்டார்.

திராவிட இயக்கம் இல்லாமல் இருந்தால்
அப்போது நிகழ்ச்சியில் அவர் திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா, உலமாக்களுக்கு சைக்கிள்கள் உள்பட பயனாளிகளுக்கு ரூ.7 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- தமிழகத்தில் பெண்கள் படிப்பதற்கு வழி செய்தது திராவிட இயக்கம். நீதிக்கட்சி தோன்றாமல் இருந்து இருந்தாலோ, திராவிட இயக்கம் இல்லாமல் இருந்து இருந்தாலோ பெண்கள் இன்று வரை படித்து இருக்க முடியாது.

பெண்கள் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள்
அரசு துறைகளில் பெண் அதிகாரிகள் இருப்பதற்கும் திராவிட இயக்கம் தான் காரணம். அரசு தேர்வுகளில் மாணவிகள், ஆண்களை பின்னுக்கு தள்ளி முதலிடம் பெறுகிறார்கள் என்றால் இதற்கு காரணம் திராவிட இயக்கம் தான். பெண்கள் வளர்ச்சிக்கான அடிப்படை தேவைகளை நிறைவு செய்து உந்து சக்தியாக திகழ்வதும் திராவிட இயக்கம் தான். பெண்கள் வளர்சிக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி வரும் அரசாக இன்றைய அரசு உள்ளது. இவ்வாறு பேசினார்.

இது தான் அவர்களின் சுய உருவம்
முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எவ வேலு கூறியதாவது:- பிரதமர் மோடி ஐநா சபைக்கு சென்றால் கூட திருக்குறளைத்தான் மேற்கோள் காட்டுகிறார் என்று ஒன்றிய அமைச்சர்களும் தமிழகத்தில் உள்ள பாஜகஎம்.எல்.ஏக்களும் கூறுகின்றனர். அதனால் நாங்கள் தமிழுக்கு விரோதி அல்ல என்று சொல்கின்றனர். ஆனால், இப்படி எல்லாம் சொல்லிவிட்டு இந்திக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்வதாக பாஜக எம்.எல்.ஏக்கள் கூறுகின்றனர். இதுதான் அவர்களின் (பாஜக) சுய உருவம். சொல்வது ஒன்று செயல் ஒன்றாக இருக்கிறது.

விமானங்களில் கூட தமிழில் அறிவிப்பு இல்லை
தமிழகத்திற்குள் ஓடும் விமானங்களில் கூட தமிழில் அறிவிப்பு வருவதில்லை. விமானத்தில் இந்தியில் அறிவிப்பு வருகிறது. மலேசியாவுக்கு செல்லும் விமனத்தில் தமிழில் அறிவிப்பு சொல்லப்படுகிறது. சிங்கப்பூருக்கு செல்லும் விமானத்தில் தமிழில் அறிவிப்பு வருகிறது. அயல்நாடுகளில் கூட நமது தமிழ்மொழியில் அறிவிப்பு சொல்கிறார்கள். ஆனால் இந்தியாவில் ஓடும் விமானம் அதுவும் தமிழகத்தில் ஓடும் விமானத்தில் தமிழில் அறிவிப்பு வருவதில்லை. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் விமானத்தில் தமிழில் அறிவிப்பு வருவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications