இமாச்சல பிரதேச ஆற்று வெள்ளம்: அடித்துச்செல்லப்பட்ட 24 மாணவர்கள்: 5 பேர் உடல் கண்டெடுப்பு
சிம்லா: இமாசலப் பிரதேச மாநிலத்தில் சுற்றுலா சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 24 பேர், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதில் ஐந்து பேரின் உடல் மட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் மாயமானவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. ஆனால் மாணவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஹைதராபாதைச் சேர்ந்த வி.என்.ஆர்., விக்னன் ஜோதி என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்தவர்கள் இமாச்சல் பிரதேசத்திற்கு 3 நாள் சுற்றுலா புறப்பட்டு சென்றனர். இங்குள்ள பியாஸ் ஆற்றில் சிலர் குளித்தபடியும், சிலர் நதியின் நீர் ஓட்டத்தை தங்களின் மொபைலில் படம் எடுத்தப்படியும் இருந்தனர்.
இந்நேரத்தில் மின்உற்பத்திக்கென தண்ணீர் திறந்து விடப்பட்ட போது லார்ஜி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் படுவேகமாக அளவுக்கு அதிகமாக வந்தததால் இந்த மாணவர்கள் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டனர். சில நிமிடத்திற்குள் அனைவரும் தண்ணீரில் மாயமாயினர்.
இதனையடுத்து அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. ஆனால் அதற்குள் இருட்டி விட்டதால், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
சாலைமறியல்
இந்தச் சம்பவத்துக்கு ஆற்றில் முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறந்து விடப்பட்டதே காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது. இதனை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பியாஸ் ஆற்றின் கரையின் இருபகுதிகளிலும் வசிக்கும் மக்களிடம், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை கண்டால் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.
ராஜ்நாத்சிங் கவலை
இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது டுவீட்டரில் இந்த துயரச்சம்பவம் கேள்விப்பட்டு மிக துயரப்பட்டேன். வெள்ள நீரில் சிக்கியவர்களை மீட்கும் பணியை துரிதமாக நடத்த அதிகாரிகளை கேட்டுள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.
திடீரென்று வந்த வெள்ளம்
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு மாணவன் ரவிக்குமார், " அனைவரும் நதியில் மகிழ்ச்சியாக நின்று கொண்டிருந்தோம். திடீரென தண்ணீர் வெள்ளமாக வருவதை நான் பார்த்தேன், நண்பர்களிடம் உரத்த குரலில் எச்சரித்தேன். ஆனால் நதி நீர் வந்த ஒலியில் எனது குரல் யாருக்கும் கேட்காமல் போனது. 5 முதல் 6 நிமிடத்திற்குள் அனைவரும் தண்ணீரில் இழுத்து செல்லப்படுவதை பார்த்து என்னால் கதறத்தான் முடிந்தது. சிலரை காப்பாற்ற முயற்சித்தேன் பலன் எதுவும் கிடைக்கவில்லை" என்று கண்ணீர் விட்டுக் கதறினார்.
5 பேர் உடல் மீட்பு
இதனிடையே மாணவர்கள் ஐந்து பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாயமான மற்ற மாணவர்களின் நிலைபற்றி தகவல்கள் வெளியாகவில்லை.
ஸ்மிருதி இரானி பிரார்த்தனை
இதனிடையே மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இமாச்சல பிரதேசத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்துள்ளார். அங்கு மீட்பு பணியை பார்வையிட்ட அவர், இதுபோன்ற சிக்கலான சூழ்நிலையில் கல்லூரி நிர்வாகமும், முதல்வரும் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்று கேட்டுகொண்டார். மாணவர்களுக்காகவும், அவர்களின் குடும்பத்தினருக்காகவும் பிராத்தனை செய்வதாகவும் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
உதவி தொலைபேசி எண்கள்
ஆற்றில் மாயமான மாணவர்களைப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள மாண்டி மாவட்ட நிர்வாகம் 01905-223374 என்ற அவசர உதவி தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது.