மது கொடுக்க முடியாதா?: பப் ஊழியர்களை அடித்து நொறுக்கிய 25 டாக்டர்கள் கைது
Recommended Video
ஆக்ரா: ஆக்ராவில் மது கொடுக்க மறுத்த பப் ஊழியர்களை தாக்கிய 25 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பிரபலமான எஸ்.என். மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் 25 ஜூனியர் மருத்துவர்கள் கடந்த சனிக்கிழமை இரவு பப்புக்கு சென்றுள்ளனர்.
பப் மூடும் நேரம் என்பதால் அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் மருத்துவர்களுக்கு மது கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் கோபம் அடைந்த மருத்துவர்கள் பப் ஊழியர்களை அடித்து நொறுக்கியதுடன் அங்கிருந்த பொருட்களையும் உடைத்துள்ளனர்.
இதை தடுக்க வந்த போலீசாரையும் தாக்கி அவர்களின் சீருடைகளை கிழித்துள்ளனர். இதையடுத்து அட்டகாசம் செய்த 25 மருத்துவர்களும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அதில் 10 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 15 பேர் இன்னும் சிறையில் உள்ளனர் என்று எஸ்.எஸ். பி. அமித் பதக் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து அறிந்ததும் மருத்துவக் கல்லூரியில் உள்ள பிற மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கல்லூரி முதல்வர் மற்றும் பிற அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
சக மருத்துவர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாட பப்புக்கு சென்ற இடத்தில் தான் இந்த பிரச்சனை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.