முதல் கட்ட பீகார் சட்டசபைத் தேர்தல்... களத்தில் 146 கோடீஸ்வரர்கள்... 30% கிரிமினல்கள்!
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவில் 25 சதவீதம் கோடீஸ்வரர்கள் களத்தில் உள்ளனர். அதாவது 146 பேர். அதேபோல வேட்பாளர்களில் 30 சதவீதம் பேர் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள்.
மொத்தம் 583 வேட்பாளர்கள் இன்று நடைபெறும் முதல் கட்ட தேர்தலில் களத்தில் உள்ளனர். இவர்களில் 174 பேர் கடுமையான குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்பது முக்கியமானது.
கொலை வழக்குகளை சுமந்து நிற்பவர்கள் அதிகம் பேர் உள்ளனர். இன்று 49 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக தேர்தல் நடந்து வருகிறது. பீகாரில் மொத்தத் தொகுதிகள் 243 ஆகும்.
49 தொகுதிகள்
இன்றைய முதல் கட்ட வாக்குப் பதிவு 49 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. 583 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 12,686 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
1.35 கோடி வாக்காளர்கள்
முதல் கட்ட தேர்தலுக்கான வாக்காளர்கள் எண்ணிக்கை 1.35 கோடியாகும். இதில் 72.27 லட்சம் பேர் ஆண்கள். பெண்களின் எண்ணிக்கை 63.7 லட்சமாகும்.
கிரிமினல்கள் ஜாஸ்தி
மொத்தம் உள்ள 583 வேட்பாளர்களில் 174 பேர் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
146 கோடீஸ்வரர்கள்
தேர்தலில் போட்டியிடும் 583 வேட்பாளர்களில் 146 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். அதாவது மொத்த வேட்பாளர்களில் 25 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் ஆவர்.
பணக்கார காங்கிரஸ்
கட்சிகளிலேயே அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட கட்சி காங்கிரஸ்தான். அக்கட்சி வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 8 கோடியாகும். 2வது இடம் ஐக்கிய ஜனதாதளத்திற்கு. அவர்களது சராசரி சொத்து மதிப்பு ரூ. 4.6 கோடியாகும். ராஷ்டிரிய ஜனதாதளம் 4 கோடி, லோக் ஜன் சக்தி கட்சி 2.7 கோடி, பாஜக 2.15 கோடி, பகுஜன் சமாஜ் கட்சி 1.6 கோடி, சமாஜ்வாடி கட்சி 78 லட்சமாக சராசரி சொத்து அளவு உள்ளது.
பட்டதாரிகள் அதிகம்
இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 124 பேர் பட்டதாரிகள் ஆவர். பேராசிரியர்கள் 44 பேர். முதுநிலை படிப்பை முடித்தவர்கள் 63 பேர். டாக்டர்கள் 10 பேர். 57 சதவீதம் பேர் பிளஸ்டூ அல்லது அதற்குக் கீழ் படித்தவர்கள் ஆவர்.
பிளஸ்டூ பாஸ் 143 பேர்
பிளஸ்டூ பாஸ் ஆனவர்கள் 143 பேர் உள்ளனர். 10ம் வகுப்பை முடித்தவர்கள் 108 பேர். 8வது வகுப்பு வரை படித்தவர்கள் 20 பேர். 5வது வகுப்பு முடித்தவர்கள் 9 பேர். படிப்பறி உடையோர் 52 பேர், எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் 3 பேர்.
ஜாமீனில் வெளியே வர முடியாத குற்றம் செய்தோர்
37 தொகுதிகளில் போட்டியிடும் 130 வேட்பாளர்கள் ஜாமீனில் வெளியே வர முடியாத அளவிலான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வழக்குகளை சுமந்து நிற்பவர்கள் ஆவர்.
ஐக்கிய ஜனதாதள கோடீஸ்வரர்கள்
ஐக்கிய ஜனதாதளம் சார்பில்தான் அதிக அளவிலான கோடீஸ்வரர்கள் களத்தில் உள்ளனர். அதாவது 19 பேர். அடுத்த இடம் பாஜகவுக்கு, 18 பேர். ஆர்ஜேடிக்கு 11 பேர் உள்ளனர்.
முக்கியப் புள்ளிகள்
இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் முக்கிய வேட்பாளராக சதானந்த் சிங் நிற்கிறார். அதேபோல லோக் ஜனசக்தி சார்பில் மாநிலத் தலைவர் பசுபதி குமார் பரஸ், மஞ்சி கட்சியின் மாநிலத் தலைவர் சகுனி செள்த்ரி, ஐக்கிய ஜனதாதள தலைவர் விஜய் செளத்ரி, ஆர்ஜேடியின் ஸ்ரீ நாராயண் யாதவ், ஆர்ஜேடியின் அலோக் மேத்தா, பாஜக தலைவர்கள் ரேனு குஷ்வாலா, பிரேம் ரஞ்சன் டேல், ராம் தேவ் ராய் ஆகியோர் முதல் கட்ட தேர்தலில் முக்கியஸ்தர்கள்.