மவுலானா மசூத் அஸாரை இந்திய சிறையில் இருந்து விடுவிக்க 4 முறை முயற்சித்த பாக். தீவிரவாதிகள்!
டெல்லி: பதான்கோட் விமானப் படை தளம் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி மவுலானா மசூத் அஸாரை கைது செய்ய இந்தியா வலியுறுத்தி வருகிறது. இந்த மவுலானா மசூத் அஸார் இந்திய சிறையில் இருந்த போது 4 முறை விடுவிப்பதற்கான சதிச் செயலில் தீவிரவாதிகள் ஈடுபட்டதாக "ரா' முன்னாள் தலைவர் சி. டி. சஹாய் கூறியுள்ளார்.
பதான்கோட் விமானப் படை தளத்தின் மீதான தாக்குதலில் மட்டுமின்றி நாடாளுமன்றத்தின் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கும் மூளையாக செயல்பட்டது மவுலானா மசூத் அஸாரே. ஜம்மு காஷ்மீரிலும் பல பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய ஜெய்ஷ்-இ முகமது அமைப்பின் தலைவர்தான் மவுலானா மசூத் அசார்.
1999ஆம் ஆண்டு இந்தியாவின் ஐசி-814 பயணிகள் விமானத்தை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானின் கந்தகாருக்கு கடத்திய போது அவர்களது ஒற்றை கோரிக்கையாக இருந்தது இந்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த மவுலானா மசூத் அஸாரை விடுதலை செய்வது மட்டுமே. இந்தியாவின் சிறையில் இருந்து மவுலானா மசூத் அஸாரை விடுதலை செய்ய ஏற்கனவே 4 முறை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முயற்சித்ததாக கூறுகிறார் கந்தகார் விமானக் கடத்தலில் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய 'ரா' முன்னாள் தலைவர் சி.டி. சஹாய்.
இது தொடர்பாக நமது ஒன் இந்தியாவுக்கு சி.டி. சஹாய் அளித்த பேட்டி:
கேள்வி: மவுலானா மசூத் அஸாரை அப்போது விடுதலை செய்தது தவறு என கருதுகிறீர்களா?
பதில்: இது தொடர்பாக பல்வேறு வாத பிரதிவாங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.. அப்போதைய சூழ்நிலைக்கேற்பவே அரசு முடிவெடுத்தது.
கேள்வி: கந்தகார் விமானக் கடத்தல் தொடர்பாக வேறு தகவல்கள்?
பதில்: கந்தகார் விமானக் கடத்தலைப் பொறுத்தவரையில் மவுலானா மசூத் அஸாரை விடுவிக்க வேண்டும் என்ற ஒரே அஜெண்டாதான் இருந்தது. அதற்கு முன்னரும் கூட 4 முறை மவுலானா மசூத் அஸாரை விடுதலை செய்ய முயற்சிகள் மேற்கொண்டிருந்தனர் பயங்கரவாதிகள்
கேள்வி: மசூத் அஸாரை விடுவிக்காமல் வேறு ஏதும் தீர்வு இருந்ததா?
பதில்: இல்லை.. அப்படி வேறு வாய்ப்பு எதுவும் இருந்தது இல்லை.. கந்தகார் விமானக் கடத்தல் பேச்சுவார்த்தையில் முழுமையாக நான் பங்கேற்றிருந்தேன்.
நாங்கள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தவில்லை. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மூலமாகத்தான் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த ஒவ்வொரு பேச்சுவார்த்தையும் தலிபான்களின் தலைவர் முல்லா ஒமர் மற்றும் விமானக் கடத்தல்காரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
அதாவது மவுலானா மசூத் அஸாரை விடுவிப்பது தொடர்பாக பாகிஸ்தானும் தலிபான்களும் ஒருங்கிணைந்தே செயல்பட்டு வந்தனர்.
கேள்வி; ஐசி-814 விமானத்தில் இருந்த பயணிகளை மீட்பதற்கு தாக்குதல் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என கருதுகிறீர்களா?
பதில்: அது மிகவும் கடினமான ஒன்று. விமானத்தைக் கடத்தியவர்கள் ஒரு அரசின் ஆதரவாளர்கள். அவர்களுக்கு பாகிஸ்தான் முழு ஆதரவு அளித்து வந்தது. ஆகையால் கமாண்டோ படை தாக்குதல் என்பது சாத்தியமற்றதாக இருந்தது.
அதேபோல் ஆப்கானிஸ்தானிலும் கடத்தல்காரர்களுக்கு முழு ஆதரவு இருந்தது. நம்மைப் பொறுத்தவரை அவர்கள் பயங்கரவாதிகள்.
ஆகையால் அவர்களிடம் சிக்கியிருந்த பயணிகளை பாதுகாப்பாக மீட்பதே மிக முக்கியமானதாக இருந்தது. அந்த கடத்தல் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்களது பிரதான நோக்கமே மவுலானா மசூத் அஸாரை விடுவிப்பதாகத்தான் இருந்தது. இந்த கடத்தல் சம்பவத்தில் தலிபான்களும் முழு வீச்சில் ஈடுபட்டிருந்தனர்.
கேள்வி: பயங்கரவாதிகள் பணம் தொடர்பான கோரிக்கை ஏதேனும் முன் வைத்திருந்தனரா?
பதில்: பயங்கரவாதிகளுடனான பேச்சுவார்த்தையின் போது நானும் அந்த அறையில்தான் இருந்த்தேன். ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் எங்களுடன் பேசினார். அவர் மூலமாக பயங்கரவாதிகள் தங்களது நிபந்தனை பட்டியலை அனுப்பியிருந்தனர்.
அதில் பிணைத் தொகையும் கேட்கப்பட்டு இருந்தது. ஆனால் மத்திய அரசு அந்த கோரிக்கையை நிராகரித்திருந்தது.
மத்திய அரசு இதை நிராகரித்தது தொடர்பாக தலிபான் தலைவர் முல்லா ஒமரிடம் பேச வேண்டும் என்று ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சர் எங்களிடம் கூறினார்.
இதனைத் தொடர்ந்து முல்லா ஒமரிடம் பேசிவிட்டு வந்த ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சர், பயணிகளை பாதுகாப்பாக விடுவிக்க முல்லா ஒமர் பிணைத் தொகை கேட்பதாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல் காஷ்மீரில் உயிரிழந்த சஜ்ஜாத் என்ற பயங்கரவாதியின் உடலை பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லவும் நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால் முல்லா ஒமரோ. இஸ்லாமிய மத முறைப்படி சஜ்ஜத் உடல் புதைக்கப்பட்டிருந்தால் அதை தோண்டி எடுப்பது இஸ்லாமிய மத வழக்கத்துக்கு எதிரனாது என குறிப்பிட்டிருந்தார்.
இத்தனை பேச்சுவார்த்தைகளிலும் அவர்களுக்கு முதன்மையாக இருந்தது மவுலானா மசூத் அஸாரை விடுவிப்பது ஒன்றுதான். பணமோ வேறு எதுவுமோ கொடுக்கப்படவில்லை.
இவ்வாறு சி.டி. சஹாய் கூறினார்.