லிப்டில் சிக்கி மரணம்.. கொல்கத்தா தீ விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு.. என்ன நடந்தது?
கொல்கத்தா: கொல்கத்தாவில் ரயில்வே குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை 7 ஆக இருந்த நிலையில் மேலும் 2 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் புதிய கொய்லாகாட்டில் உள்ள ரயில்வே கட்டிடத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. பல மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் நேற்று 13வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. இங்கு ரயில்வே ஊழியர்கள் குடி இருக்கிறார்கள்.
அதேபோல் கீழ் தளத்தில் ரயில்வே டிக்கெட் முன்பதிவு தளமும் அமைந்துள்ளது. இங்கு 13வது மாடியில்தான் நேற்று இரவு திடீரென தீ பிடித்தது.

பரவியது
13வது மாடியில் பிடித்த தீ வேகமாக 12வது மாடிக்கு பரவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினார்கள். 13வது மாடியில் ஏற்பட்ட தீயை அணைக்க இவர்கள் வேகமாக செல்ல ஆசைப்பட்டு லிப்டில் சென்று இருக்கிறார்கள்.

சிக்கல்
லிப்டில் 12 மாடிகள் வரை சென்றவர்கள், 12வது மாடியில் இறங்க முயற்சி செய்யும் போது அவர்களை தீ சூழ்ந்துள்ளது. லிப்ட் கதவும் சிக்கிய நிலையில் லிப்டிற்கு உள்ளேயே தீயணைப்பு வீரர்கள் சிக்கி பலியானார்கள். இந்த விபத்தில் 4 தீயணைப்பு வீரர்கள், ஒரு போலீசார் பலியாகி உள்ளனர்.

பலி
மொத்தமாக இந்த விபத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். அங்கு தொடர்ந்து மீட்பு பணி நடக்கிறது. மத்திய அரசின் ரயில்வே நிர்வாகம்தான் இந்த விபத்துக்கு காரணம். போதுமான உதவிகளை செய்ய கூட ரயில்வே நிர்வாகம் ஒத்துழைக்கவில்லை என்று மத்திய அரசு மீது மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி புகார் வைத்துள்ளார்.

இரங்கல்
பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஆகியோர் இந்த தீ விபத்து சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளனர். விபத்தில் உறவினர்களை இழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் மற்றும் அரசு வேலை கொடுப்பதாக மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications