உலக கோப்பை ஹாக்கி போட்டிக்காக கலைக்கட்டிய ஒடியா.. ரசிகர்களை உற்சாகப்படுத்த பலே ப்ளான்
புவனேஸ்வர்: உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா மாநிலத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், போட்டியை கண்டு ரசிப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர். இதனால் புவனேஸ்வர் நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.
புவனேஸ்வரின் சின்னங்களில் ஒன்றான கலிங்கா ஸ்டேடியம் மற்றும் ரூர்கேலாவில் உள்ள இந்திய ஹாக்கியின் மெக்கா என்று அழைக்கப்படும் பிர்சா முண்டா சர்வதேச ஹாக்கி மைதானங்களில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு மைதானங்களிலும் தற்போதுவரை உலக கோப்பை ஹாக்கி போட்டி தொடரில் தலா ஒரு போட்டிகள் நடைபெற்றுள்ளன. இது சாதாரண சாதனையல்ல. இதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்க பெரும் முயற்சி தேவைப்படுகிறது.
கலிங்கா மைதானத்தில் சுமார் 15,000 பேர் வரை அமர முடியும். அதே பிர்சா முண்டா மைதானத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் அமர முடியும். இந்த மைதானங்களில் மட்டுமல்லாமல் ஒடிசா முழுவதும் உள்ள நகர தெருக்களில் வெளிநாட்டு பயணிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி பார்க்க குவிந்துள்ளனர். மேலும் பார்வையாளர்கள் பலர் கைகளில் தங்கள் அணியின் கொடிகளுடனும், தங்களது அணியை பிரதிபலிக்கும் வகையில் நிறங்கள் கொண்ட உடைகளையும் அணிந்தவாறு வீதிகளில் அணிவகுத்து வருகின்றனர்.
ஒடிசா மில்லட்ஸ் மிஷன்.. பாரம்பரிய உணவு பயிர்களை மீட்கும் முயற்சி.. நவீன் பட்நாயக் அரசு புது புரட்சி!
ஒடிசாவின் புவனேஸ்வர் நகரமானது அதன் பாரம்பரியாத்திற்காக காலங்காலமாக அறியப்பட்டு வருகுிறது. இது இந்தியாவின் கோயில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. உலக கோப்பை ஹாக்கியை பார்க்க அதிக அளவில் பார்வையாளர்கள் குவிந்துள்ள நிலையில், புவனேஸ்வர் நகரில் உள்ள கோயில்கள் மற்றும் நினைவு சின்னங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. அதேபோல சுவரோவியங்கள் மூலம் ஒடிசாவின் பாரம்பரியத்தை கலைஞர்கள் எதிரொலித்துள்ளனர். மற்றொரு புறம் பிர்சா முண்டா மைதானம் அமைந்திருக்கும் ரூர்கேலா நகரம் இரும்பு, எஃகு போன்றவற்றிற்காக புகழ் பெற்ற நகரமாகும். இங்கு வரும் ஹாக்கி ரசிகர்களை ஈர்க்க புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல சில இடங்களில் ஹாக்கி குறித்த திரையிடல்களை மாநில அரசு முன்னெடுத்திருக்கிறது.
அதேபோல இந்த உலக கோப்பை போட்டியை முன்னிட்டு 'தீம் பார்க்' ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு 'ஒல்லி லேண்ட்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஒல்லி என்பது ஒடிசாவின் விளையாட்டு சின்னமாகும். இந்த ஒல்லி லேண்ட்டில் பிரமாண்டமான ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மட்டுமல்லாது உலக கோப்பையின் சின்னமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது தவிர ரசிகர்கள் பலர் இந்த உலக கோப்பை போட்டியில் பங்கேற்க வந்துள்ள வெளியூர்/மாநில/நாட்டின் பயணிகளுக்க உற்சாகும் அளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
உணவுகளை பொறுத்த அளவில், ஒடிசாவின் பாரம்பரிய உணவுகளை உள்ளூர் கடைக்காரர்கள் வரிசைப்படுத்தியுள்ளனர். இவையனைத்தும் நிச்சயம் வெளியூர் ரசிகர்களுக்கம் பயணிகளுக்கும் புதிய அனுபவத்தை கொடுக்கும். இத்துடன் இரண்டு நகரங்களிலும் பல கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா நகரங்களில் 'டாட் ஃபெஸ்ட்' எனும் தலைப்பில் கலை நிகழ்ச்சிகள் நேற்று (ஜன.15) தொடங்கியது. இந்நிகழ்ச்சிகள் வரும் 29ம் தேதி வரை நடைபெறும். பாரம்பரிய இசை, நடனம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இந்த போட்டிக்கு வருகை தரும் அனைவரையும் மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் வரவேற்றிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், "போட்டிய காண வருகை தரும் ரசிகர்கள், பங்கேற்க வரும் பிரதிநிதிகள் அனைவரையும் நான் வரவேற்கிறேன். ஒடிசா மாநிலம் விருந்தோம்பலுக்கு பெயர்பெற்றது. இப்போட்டியை நீங்கள் கண்டுகளிப்பதன் மூலம் எங்கள் ஊரின் அழகான நினைவுகளையும் சில பொருட்களையும் உங்களுடன் எடுத்துச்செல்வீர்கள் என்று நம்புகிறேன்" என கூறியுள்ளார். மேலும், "இந்த போட்டியை காண வருபவர்கள் எந்த பாகுபாடும் கொண்டிருக்காமல் ஒன்று சேர்ந்து போட்டியை ரசிப்பார்கள். ஹாக்கி இந்தியாவுடன் சேர்ந்து இப்போட்டியை நடத்துவதில் ஒடிசா அரசு பெருமைக்கொள்கிறது" என்று கூறியுள்ளார்.