மாஸ் ஏற்பாடு! பஞ்சாப்பில் ஒன்றாக நகர்வலம் செல்லும் கெஜ்ரிவால் -பகவந்த்.. ஆம்ஆத்மி பிரம்மாண்ட ஊர்வலம்
அமிர்தசரஸ்: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆத்ஆத்மி அமோக வெற்றி பெற்ற நிலையில் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வராக பதவியேற்க உள்ள பகவந்த் மான் ஆகியோர் இன்று அமிர்தசரஸில் பிரமாண்ட ஊர்வலம் நடத்தி மக்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.
பஞ்சாப் சட்டசபைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 14ல் தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் மார்ச் 10ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம்ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்றது.
காங்கிரஸ் வெறும் 18 தொகுதிகளிலும், சிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி) 3, பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதாவது காங்கிரஸ் கட்சி ஆம்ஆத்மியிடம் ஆட்சியை பறிகொடுத்தது. காங்கிரஸ் முதல்வர் சரண்ஜித் சன்னி, மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான அம்ரீந்தர் சிங் ஆகியோர் தோல்வியடைந்தனர்.

ஆம்ஆத்மி முதல்வர்
கடந்த தேர்தலை ஒப்பிடும்போது ஆம்ஆத்மி 72 இடங்களில் அதிகமாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அந்த கட்சியின் பகவந்த் மான் முதல்வராக பொறுப்பு ஏற்க உள்ளார். துரி தொகுதியில் 58,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆம்ஆத்மியின் பகவந்த் மான் முதல்வராக பதவியேற்க உள்ளார். இதற்கு முன்னோட்டமாக நேற்று முன்தினம் மொஹாலியில் நடந்த ஆம்ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் ஆம் ஆத்மியின் சட்டசபை கட்சி பகவாந்த் மான் தேர்வு செய்யப்பட்டார்.

மார்ச் 16ல் பதவியேற்பு
இதையடுத்து தலைநகர் சண்டிகரில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேற்று அவர் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் மார்ச் 16ல் பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழா சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் சொந்த கிராமமான கட்கர் கலனில் நடைபெற உள்ளது. இதில் ஆம்ஆத்மியின் தலைவர் அரவிந்த கெஜ்ரிவால் உள்பட கட்சி தலைவர்களும், பிற கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

பிரமாண்ட ஊர்வலம்
இந்நிலையில் பஞ்சாப் அமிர்தசரஸில் அரவிந்த கெஜ்ரிவால், முதல்வராக பதவியேற்க உள்ள பகவந்த் மான் ஆகியோர் இன்று பிரமாண்டமாக ஊர்வலம் சென்று மக்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளனர். இதுபற்றி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் கூறுகையில், ‛‛பஞ்சாப் மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகளை குரு சாகிப்பின் ஆசீர்வாதத்துடன் நிறைவேற்றுவோம். எங்கள் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அமிர்தசரஸில் ஊர்வலமாக வந்து மக்களுக்கு நன்றி கூறுகிறார்.

வீட்டிலேயே தீர்வு
பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே தங்களின் குறைகள், திட்டங்களை பெற நடவடிக்கை எடுக்கப்படும். ஏனென்றால் நாங்கள் தேர்தலின்போது வீடு வீடாகவும், வயல்களுக்கும் சென்று ஓட்டு கேட்டோம். நம்பிக்கையுடன் ஓட்டளித்த மக்களுக்கு தங்கள் குறைகளை தீர்க்க தலைநகர் சண்டிகருக்கு வராதபடி வீட்டிலேயே தீர்வு ஏற்படுத்தி கொடுக்க முயற்சிப்போம்'' என்றார்.












Click it and Unblock the Notifications