ஒப்பந்ததாரர் கொலை வழக்கில் நிழல் உலக தாதா அபுசலீமுக்கு ஆயுள் தண்டனை!!
மும்பை: மகாராஷ்டிராவின் பிரபல கட்டுமான ஒப்பந்ததாரர் பிரதீப் ஜெயின் படுகொலை வழக்கில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி அபு சலீமுக்கு மும்பை தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு தீவிரவாதி தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளிகளில் அபுசலீமும் ஒருவன். வெடிகுண்டுகளையும், ஆயுதங்களையும் கடத்தி செல்ல உதவிய இவன் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்ற பிறகு, மும்பை நிழல் உலக தாதாவாக மாறினான்.
அபுசலீம் மீது மொத்தம் 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மும்பையில் உள்ள இந்தி படத் தயாரிப்பாளர்களை மிரட்டி இவன் தனி ராஜ்ஜியம் நடத்தி வந்தான்.
இந்த நிலையில் மும்பை குண்டு வெடிப்பு தொடர்பாக சி.பி.ஐ. தேடியதால் இவன் நடிகை மோனிகா பேடியுடன் வெளிநாட்டுக்கு சென்று விட்டான். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சுற்றித் திரிந்த இவனை துபாய் போலீசார் பிடித்தனர்.
இதைத்தொடர்ந்து 2005-ம் ஆண்டு அபுசலீமை துபாய் அரசு இந்தியாவிடம் ஒப்படைத்தது. மும்பை கொண்டு வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அபுசலீம் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகள் மீது விசாரணை நடந்து வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக அவன் சிறையில் இருந்தபடி இந்த வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டு வருகிறான். இந்த நிலையில் 1995-ம் ஆண்டு மும்பையில் பிரபல கட்டிட ஒப்பந்ததாரர் பிரதீப் ஜெயின் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று மும்பை தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் அபுசலீமுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.