ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: தயாநிதி, கலாநிதி, காவேரி முன்ஜாமீன் மனு விசாரணை ஆக. 1க்கு ஒத்திவைப்பு
டெல்லி: ஏர்செல் - மேக்சிஸ் பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் குழுமத்தலைவர் கலாநிதி மாறன் அவரது மனைவி காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2004 ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளரான சிவசங்கரனை மிரட்டி, அவரின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனந்த கிருஷ்ணனுக்கு விற்கச் செய்ததாக புகார் எழுந்தது.
இந்தப் பணபரிவர்த்தனையில் அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றிருப்பதாக, டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்க துறை சார்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தயாநிதி மாறன், சன் குழுமத்தலைவர் கலாநிதி மாறன் உட்பட 6 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
ஏர்செல்-மேக்சிஸ் பேர முறைகேடு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மாறன் சகோதரர்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதன் அடிப்படையில், கடந்த 11ம் தேதி மாறன் சகோதரர்களான தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி ஆகியோர் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இந்நிலையில், வழக்குரைஞர் காலஅவகாசம் கோரியதையடுத்து விசாரணையை ஜூலை 21ம் தேதிக்கு சிபிஐ நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
இதையடுத்து, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மாறன் சகோதோரர்கள், அவரது மனைவி காவேரி கலாநிதி ஆகியோர் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
கலாநிதி மாறன், தயாநிதி மாறன், காவேரி கலாநிதி, சவுத் ஆசியா எஃப்எம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சண்முகம் உள்ளிட்டோர் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் விசாரணை இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதால், மாறன் சகோதரர்களுக்கு முன்ஜாமீன் கிடைக்க வாய்ப்புகள் குறைவு என்ற தகவலும் வெளியாகியுள்ளனது.
தேவைப்படும் பட்சத்தில், மாறன் சகோதரர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரவும் அமலாக்கத்துறையினர் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
இதனிடையே டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று தயாநிதிமாறன், சன் குழுமத்தலைவர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் இன்று ஆஜராகினர். முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஓ.பி சைனி உத்தரவிட்டார்.