ஓட்டுப் போடுங்க...ஒரே மாதத்தில் பஞ்சாப்பில் போதைப் பொருள் கடத்தல் கும்பலை ஒழிப்போம்: ராகுல்
ஜலந்தர்: காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ஒரே மாதத்தில் பஞ்சாப் மாநிலத்தை போதைப் பொருள் கடத்தல் கும்பலின் பிடியில் இருந்து விடுவிப்போம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.
பஞ்சாப் மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பஞ்சாப் விவகாரங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
பஞ்சாப்பின் போதைப் பொருள் கடத்தல் கும்பலைப் பற்றிய "உத்தா பஞ்சாப்" திரைப்படத்துக்கு சென்சார் போர்டு கத்தரி போட்டிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. உத்தா பஞ்சாப் திரைப்படத்துக்கு ஆதரவாக ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில் டெல்லி மாநிலத்தில் அரசு பள்ளிகளில் பஞ்சாபி மொழியை கட்டாயமாக்கியுள்ளது ஆம் ஆத்மி அரசு. மத்திய பாஜக அரசோ, 32 ஆண்டுகளுக்கு முந்தைய சீக்கியர்கள் மீதான வன்முறை வழக்குகளைத் தூசு தட்டப் போவதாக தெரிவித்துள்ளது. இந்த வழக்குகள் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு எதிரானது.
தற்போது காங்கிரஸும் தம் பங்குக்கு தேர்தல் கோதாவில் குதித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதற்கு ஆளும் சிரோமணி அகாலிதள்- பாஜக அரசுதான் என குற்றம்சாட்டி ஜலந்தரில் காங்கிரஸ் கட்சியினர் கண்டனப் போராட்டத்தை இன்று நடத்தினர். இதில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.
இக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
ஒளிமயமான பஞ்சாப்பை உருவாக்க வேண்டுமானால் போதைப் பொருள் கடத்தல் கும்பலை ஒழிக்க வேண்டும். போலீசாரை சுதந்திரமாக செயல்படவிட்டால் நிச்சயம் அவர்களால் சாதிக்க முடியும்.
போதைப் பொருள் கடத்தலை மாநில அரசாங்கமே ஊக்கப்படுத்துகிறது... அந்த கும்பல்கள் மூலம் ஆதாயமடைகிறது அரசாங்கம். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒரே மாதத்தில் பஞ்சாப் மாநிலத்தை போதைப் பொருள் கடத்தல் கும்பலிடமிருந்து விடுவிப்போம்.
இவ்வாறு ராகுல் காந்தி உரையாற்றினார்.
ஆனால் காங்கிரஸின் இந்த போராட்டத்தை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. மன்மோகன்சிங் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பஞ்சாப்பில் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க எந்த ஒருநடவடிக்கையும் மேற்கொள்ளாமல் தற்போது இரட்டை வேடம் போடுகிறது என அக்கட்சி சாடியுள்ளது.