காங்கிரசுடன் கூட்டணி வைக்க தயங்குவது ஏன்?.. மனம் திறந்த அகிலேஷ் யாதவ்!
பாஜகவை சரமாரி விமர்சித்து அகிலேஷ் யாதவ் பேட்டி தந்துள்ளார்
கான்பூர்: காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறித்து நாங்கள் நினைத்து கூட பார்க்க முடியாது. கடந்த காலங்களில் எங்களுக்கு கிடைத்த கசப்பான அனுபவங்கள்தான் இதற்கு காரணம் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜக.வின் ஆட்சி அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் முடிவுக்கு வருகிறது. இதனால் விரைவில் அங்கு தேர்தல் நடக்க உள்ளது.
இந்த தேர்தலை மனதில் வைத்து சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் விஜய் யாத்திரை தொடங்கியுள்ளார். இந்த பிரச்சாரங்களில் பாஜகவை சரமாரியாக விமர்சித்தும் வருகிறார்.
நீதி கேட்டு பயணம்... மெர்சிடிஸ் பென்ஸ் பஸ்ஸில் விஜய் யாத்ரா... அகிலேஷ் யாதவை கலாய்க்கும் பாஜக..!
5 வருட பாஜக
"பாஜகவின் மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும், விவசாயிகளை ஏமாற்றி விட்டது, அவர்களின் வேலைகளை பறித்துவிட்டது, பணவீக்கம் அதிகரித்துள்ளது... பாஜக அரசு மக்களுக்கு துரோகம் செய்துள்ளது... மக்களிடம் ஆசி பெற சமாஜ்வாடி கட்சி தொடர்ந்த இந்த விஜய் யாத்திரையை நடத்துகிறது.. பாஜக ஆட்சியை இழக்கும்... உத்தர பிரதேசத்திலிருந்து பாஜக துடைத்தெறியப்படும்" என்று இந்த யாத்திரை குறித்தும் கூறியிருந்தார்.
பாஜக பதிலடி
அகிலேஷ் யாதவின் இந்த குற்றச்சாட்டுக்கு உபி அமைச்சர் சித்தார்த் நாத் சிங் ஏற்கனவே பதிலடி தந்துள்ளார்.. "பிரயாக்ராஜ் சென்று கங்காவும், யமுனாவும் எவ்வளவு தூய்மையாக இருக்கிறது என்று அகிலேஷ் யாதவ் பார்க்க வேண்டும்.. இந்த யாத்திரை மூலம் அவர் எங்கள் அரசு செய்த வேலைகளை பார்ப்பார்" என்றும் பதிலடி தந்திருந்தார்.
அகிலேஷ் யாதவ் விளக்கம்
இந்நிலையில், சிஎன்என் நிறுவனத்துக்கு அகிலேஷ் யாதவ் பிரத்யேக பேட்டி ஒன்று தந்துள்ளார்.. அதில், வரப்போகும் தேர்தலை எதிர்கொள்வது குறித்து விளக்கி உள்ளார்.. தங்களுக்கு கடந்த காலங்களில் கூட்டணி விஷயங்களில் நிறைய கசப்பான அனுபவங்கள் கிடைத்துள்ளதால், கூட்டணி விஷயத்தில் ஜாக்கிரதையாகவே உள்ளோம்.. காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது போன்ற எண்ணமே இப்போது இல்லை என்று கூறியுள்ளார்.
சமாஜ்வாடி
அத்துடன் வரப்போகும் தேர்தலில் தங்களின் சமாஜ்வாடி கட்சிதான் பாஜகவுக்கு ஒரு சவாலாக இருக்க போகிறது என்றும் விரிவாக அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல, தொடர்ந்து அவர் பேசும்போது, "விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.. அவர்கள் எவ்வாறு நசுக்கப்படுகிறார்கள் என்பதை பாருங்கள்... விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கவில்லை... விவசாயிகளின் வாழ்க்கையில் வரப்போகும் மாற்றத்திற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்...அதிக மின் கட்டணம் விவசாயிகளையும் வணிகர்களையும் நசுக்குகிறது...
வேலைவாய்ப்புகள்
மின் சீர்திருத்தத்தில் மாற்றங்கள் மற்றும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ஆகியவற்றை நாங்கள் தருவோம்.. இளைஞர்களுக்கான வேலைகளை தருவோம்.. உத்தரபிரதேசத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது எங்கள் கடமை.. பாஜக ஆட்சியின் ஐந்து வருடங்களில், தலித்துகளும் சிறுபான்மையினரும் அவமானப்படுத்தப்பட்டு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.. அவர்களின் உரிமை நசுக்கப்பட்டுள்ளன.
வேருடன் அழிக்கும்
சமாஜ்வாடி கட்சி இந்த அநீதியை வேருடன் அழிக்கும். உத்திரபிரதேச தேர்தல் என்பது அந்த மாநில மக்களின் நலனை பற்றியது.. அம்மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள். ஜனநாயகத்தில், ஒவ்வொரு கட்சிக்கும் பிரச்சாரம் செய்ய உரிமை உண்டு.. ஆனால் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களுக்குதான் தெரியும்" என்றார்.