மம்தா போடும் மாஸ்டர் பிளான்! ஸ்டாலின் & கேசிஆரிடம் நேரடியாக பேச இது தான் காரணம்.. பரபர தகவல்
கொல்கத்தா: தமிழ்நாடு மற்றும் தெலங்கானா முதல்வர்களைத் தொடர்பு கொண்டு பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மீண்டும் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மாபெரும் ஒரு வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் 3ஆவது முறையாக மம்தா மேற்கு வங்க முதல்வராகப் பொறுப்பேற்றார்.
மோடி ஆட்சியில் 5 லட்சம் கோடி அளவுக்கு வங்கி மோசடி.. ராகுல் காந்தி திடுக் குற்றச்சாட்டு
அதன் பின்னர் காங்கிரசுடன் இணைந்து வலுவான ஒரு எதிர்க்கட்சி கூட்டணியைக் கட்டமைக்க அவர் முயன்றார். இருப்பினும், அந்த முயற்சிக்குப் பலன் கிடைக்காத நிலையில், காங்கிரஸ் தவிர இதர பிராந்திய எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மம்தா ஈடுபட்டுள்ளார்.
மம்தா
இதற்காக மம்தா பானர்ஜி நேற்று ஞாயிற்றுக்கிழமை, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தெலங்கானா முதல்வர் கேசிஆர் ஆகியோருடன் பேசினார். நாட்டில் உள்ள கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாக்க எதிர்க்கட்சி முதலமைச்சர்களின் கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் குறித்து இரு மாநில முதல்வர்களுடன் மம்தா விவாதித்தார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, இந்தக் கூட்டத்திற்குக் காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்படாது என்பதைத் தெளிவு படுத்தினார்.
காங்கிரஸ் மீது தாக்கு
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "காங்கிரசுடன் எந்தவொரு பிராந்தியக் கட்சியும் நல்லுறவைக் கொண்டு இருக்கவில்லை. காங்கிரஸ் கட்சி அதன் வழியில் செயல்படும். நாங்கள் எங்கள் வழியில் செயல்படுவோம்" என்று அவர் தெரிவித்தார். பாஜகவை எதிர்க்கும் பிராந்திய எதிர்க்கட்சிகளுடன் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஒன்று சேருமா என்ற கேள்விக்குப் பதிலளித்த மம்தா, "இந்த விஷயத்தில் காங். மற்றும் இடதுசாரி என இரு கட்சிகளும் செவி சாய்க்கவில்லை" என்றார்.
ஒன்றுபட வேண்டும்
தமிழ்நாடு மற்றும் தெலங்கானா முதல்வர்கள் உடன் தொலைப்பேசியில் பேசியதைக் குறிப்பிட்ட மம்தா, "நாட்டின் கூட்டாட்சி அமைப்பு இப்போது அழிக்கப்படுகிறது. நாட்டின் அரசியலமைப்பு சிதைக்கப்படுகிறது. எனவே, இதைக் காக்க நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். கூட்டாட்சிக் கட்டமைப்பைப் பாதுகாக்க நாம் அனைவரும் இணைந்து முயற்சி செய்கிறோம். அனைத்து பிராந்திய கட்சிகளுக்கு இடையே இந்த விவகாரத்தில் ஒரு புரிதல் ஏற்பட வேண்டும்" என்றார்.
மம்தா முயற்சி
கோவா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க மம்தா முயன்றார். இருப்பினும், அந்த கூட்டணி அமையவில்லை. அதன் பின்னர் காங்கிரஸ் கட்சி உடனான மம்தாவின் பனிப்போர் தீவிரமடைந்தது. கோவா மாநிலத்தில் கூட்டணி அமையாமல் போனதால் இரு கட்சிகளும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டனர். இந்தச் சூழலில் தான் காங்கிரஸ், இடதுசாரிகளைத் தவிர மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மம்தா ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் உபி-இல் அவர் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாகக் கூட பிரசாரம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானா முதல்வர்
தெலங்கானா முதல்வர் கேசிஆரும் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோரை விரைவில் சந்திப்பேன் என நேற்று கேசிஆர் குறிப்பிட்டார். அதேபோல தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உடனும் மேற்கு வங்க முதல்வர் மம்தா நேற்று தொலைப்பேசியில் பேசினார். இது தொடர்பாக ட்வீட் செய்திருந்த ஸ்டாலின், விரைவில் எதிர்க்கட்சி முதல்வர்கள் மாநாடு நடைபெறும் என்று ட்வீட் செய்திருந்தார்.
என்ன திட்டம்
இப்படி அனைத்து பிராந்திய எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் மம்தா தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இன்று அவர் காங்கிரஸை மீண்டும் நேரடியாகச் சாடி பேசியுள்ளார். வரும் 2024 மக்களவை தேர்தலுக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத 3ஆம் அணியை உருவாக்கும் முயற்சியிலேயே மம்தா ஈடுபட்டுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் 3ஆம் அணி என்பது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாத நிலையில், இந்த முறை அது எப்படிப்பட்ட முடிவைத் தரும் என்பதை நாம் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.