உ.பி. சட்டசபைத் தேர்தல்: அயோத்தியில் ராமர் பெயரில் பல்கலைக் கழகம்- அமித்ஷா அறிவிப்பு
அயோத்தி: அயோத்தியில் ராமர் பெயரில் ஒரு பல்கலைக் கழகம் அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். மேலும் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு மீண்டும் அமல்படுத்தவே முடியாது; முத்தலாக் முறையையும் மீண்டும் அனுமதிக்கவும் மாட்டோம் என்றும் அமித்ஷா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் கட்டுப்பாடுகளுடன் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என்பது அம்மாநில அரசியல் கட்சிகளின் கோரிக்கை.
இதனால் உரிய காலத்தில் உ.பி. சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. உ.பி. தேர்தலில் ஆட்சியை தக்க வைப்பதில் பாஜக மும்முரமாக உள்ளது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தேர்தல் பிரசாரங்களை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
2022 புத்தாண்டில் கோடீஸ்வரர் ஆக மாறப்போவது யார் தெரியுமா?
அயோத்தியில் அமித்ஷா
இன்று அயோத்தியில் அமித்ஷா பிரசாரம் செய்தார். முன்னதாக அயோத்தி Hanuman Garhi கோவிலில் அமித்ஷா வழிபாடு நடத்தினார். அயோத்தி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: நாடு விடுதலை அடைந்து 77 ஆண்டுகளுக்கு பின்னரே பிரதமரானார் மோடி. 75 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய உள்துறை அமைச்சர் சோம்நாத் கோவிலை கட்டினார்.
கரசேவகர்கள் மீது துப்பாக்கி சூடு
தற்போது 77 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்படுகிறது. உ.பி.யில் ஆட்சி செய்த சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சிகள் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முயன்ற கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தின. இந்த இரு கட்சிகளின் ஆட்சிகளில் நமது வழிபாட்டுத் தலங்களுக்கு மதிப்பளிக்கப்படவில்லை.
மீண்டும் வராது
இந்த பொதுக்கூட்டத்தின் மூலமாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.. உங்களுடைய அடுத்த தலைமுறை அரசியலுக்கு வந்தாலும் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கூடிய 370-வது பிரிவு இனி வரவே வராது. முஸ்லிம் பெண்களை விவகாரத்து செய்கிற முத்தலாக் முறையையும் அனுமதிக்கவே முடியாது.
மாஃபியாக்கள் ராஜ்ஜியம்
சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்த போது மாஃபியாக்கள் கோலோச்சிக் கொண்டிருந்தார். இப்போது மாஃபியாக்கள் சரணடைந்துள்ளனர். அயோத்தியில் விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அயோத்தி ரயில் நிலையம் சீரமைக்கப்பட்டு வருகிறது. அயோத்தியில் ராமர் பெயரில் பல்கலைக் கழகம் ஒன்றும் அமைக்கப்பட இருக்கிறது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.