பா.ஜ.க. அஜெண்டா பற்றி பேசுகிற உங்க அஜெண்டாதான் என்னங்க...? பத்திரிகையாளரிடம் எகிறிய அமித்ஷா
பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இடஒதுக்கீடு கொள்கை, தாத்ரி படுகொலை குறித்து அடுத்தடுத்து கேள்வி எழுப்பிய செய்தியாளரைப் பார்த்து, பா.ஜ.க. அஜெண்டாவை பற்றி பேசுகிற உங்களோட அஜெண்டாதான் என்ன? என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா கடுப்பாகிக் கேட்டது பரபரப்பை கிளப்பியது.
பீகார் சட்டசபை தேர்தலில் 2 கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது. பீகார் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி குறித்து சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. இதனால் அக்கட்சி தலைவர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.
பீகார் தேர்தலுக்காக ஒரு மாத காலமாக பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவும் அம்மாநிலத்திலேயே முகாமிட்டிருக்கிறார். ஆனால் நேற்றுதான் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.
பாட்னாவில் நடைபெற்ற இச்சந்திப்பில், பா.ஜ.க. இடஒதுக்கீட்டுக்கு எதிரான கட்சி அல்ல; தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம் என்றெல்லாம் அமித்ஷா கூறியிருந்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் கருத்துக்கு நேரடியான பதில் என்ன? என கேள்வி எழுப்பினார்.
அதேபோல் தாத்ரி படுகொலை குறித்தும் அச்செய்தியாளர் அடுத்தடுத்து கேள்வி எழுப்ப கடுப்பாகிப் போனார் அமித்ஷா. அந்த செய்தியாளரைப் பார்த்து, "பீகார் குறித்தோ நிதிஷ்குமார் குறித்தோ நீங்கள் எந்த ஒரு கேள்வியும் கேட்கவில்லை. பாரதிய ஜனதாவின் அஜெண்டாவை பற்றி கேள்வி கேட்பதற்கு முன்னர் உங்களோட அஜெண்டாதான் என்ன என எங்களுக்கு சொல்லுங்கள் என சீற்றமாக அமித்ஷா சொல்ல அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.