சாதி, பரம்பரை அரசியலுக்கு சவுக்கடி தரும் தேர்தல் முடிவுகள்... அமித்ஷா மக்களுக்கு நன்றி!
குஜராத் தேர்தலில் சாதி, பரம்பரை அரசியலை புறந்தள்ளி மக்கள் வளர்ச்சிக்கு வாக்களித்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லி : குஜராத்,ஹிமாச்சல் பிரதேச தேர்தலில் மக்கள் வளர்ச்சிக்கு வாக்களித்துள்ளதாகவும் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தேர்தலில் சாதி,பரம்பரை அரசியல் என்றுமே எடுபடாது வளர்ச்சி தான் கைகொடுக்கும் என்பதே மக்களின் தீர்ப்பு என்றும் அவர் பெருமையோடு கூறியுள்ளார்.
குஜராத், ஹிமாச்சல் பிரதேச மாநில தேர்தல் முடிவுகள் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா கூறியதாவது. பாஜகவிற்கு வெற்றியை உரித்தாக்கிய குஜராத், ஹிமாச்சல் மக்களுக்கு நன்றி. வளர்ச்சியை முன்வைத்த பாஜகவிற்கு வெற்றி கிடைத்துள்ளது. பரம்பரை கொள்கையை வளர்ச்சி என்ற கொள்கை முறியடித்து வெற்றி வாகை சூடியுள்ளது. 1990 தேர்தல் முதல் பாஜக குஜராத்தில் வெற்றியை மட்டுமே கண்டு வருகிறது.
சாதி அரசியலை மக்கள் புறந்தள்ளிவிட்டனர். ஆட்சியில் சாதனை படைத்தவர்களுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் 2019 தொலைநோக்கு திட்டம் நனவாகும் என்பதை தேர்தல் முடிவுகள் உறுதி செய்துள்ளன. பாஜக கணிசமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது. காங்கிரசால் எங்களை நெருங்கக் கூட முடியவில்லை.
இந்தியா முழுவதும் பிரதமர் நரேந்திர மோடியின் அலை வீசிக் கொண்டிருக்கிறது. அடுத்து வரவுள்ள 4 மாநில சட்டசபை தேர்தலிலும் கூட பாஜக ஆட்சியை பிடிக்கும். ஹிமாச்சலில் 3ல் 2 பங்கு மக்கள் பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர். அப்படியானால் பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி திட்டத்தில் இணைய வேண்டும் என்பது தான் அவர்களின் விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார்.