சிபிஐ கூடுதல் இயக்குநராக அர்ச்சனா ராமசுந்தரம் பணியாற்ற சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை!
டெல்லி: சிபிஐ கூடுதல் இயக்குநராக அர்ச்சனா ராமசுந்தரம் பணியாற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழக ஐ.பி.எஸ். அதிகாரியான அர்ச்சனா ராமசுந்தரத்தை சிபிஐ கூடுதல் இயக்குநராக நியமிக்கும் விவகாரத்தில் தொடக்கம் முதல் சர்ச்சை இருந்து வருகிறது. அர்ச்சனாவை சிபிஐ கூடுதல் இயக்குநராக நியமிப்பது தொடர்பாக முதலில் சிபிஐ- ஊழல் தடுப்பு கண்காணிப்பகம்- மத்திய அரசு இடையே மோதல் மூண்டது.

சிபிஐ கூடுதல் இயக்குநராக அர்ச்சனாவை நியமிப்பதா? அல்லது பச்நந்தாவை நியமிப்பதா என்பதுதான் பிரச்சனையாக இருந்தது. கடைசியாக அர்ச்சனா ராமசுந்தரமே அப்பதவிக்கு தேர்வானார்.
ஆனால் தமிழக அரசு அவரை விடுவிக்கவில்லை. இந்த நிலையில் திடீரென நேற்று சிபிஐ கூடுதல் இயக்குநராக அர்ச்சனா ராமசுந்தரம் பதவியேற்றார். ஆனால் தமிழக அரசோ அனுமதி பெறாமல் சிபிஐ கூடுதல் இயக்குநர் பொறுப்பேற்றதாகக் கூறி அவரை சஸ்பென்ட் செய்தது.
இந்த நிலையில்தான் வினீத் நாராயணன் என்ற பத்திரிகையாளர் ஏற்கெனவே அர்ச்சனா ராமசுந்தரம் நியமனத்தில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின் முடிவில் ஜூலை 14-ந் தேதி வரை அர்ச்சனா ராமசுந்தரம், சிபிஐ கூடுதல் இயக்குநராக செயல்பட தடைவிதித்தது உச்சநீதிமன்றம். மேலும் அர்ச்சனா ராமசுந்தரம் நியமனம் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூலை 14-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications