நீட் வந்தால் என் சகோதரி கனவு நிறைவேறாது.. அனிதாவின் சகோதரர் மணிரத்னம் உருக்கம்!
நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கும் பட்சத்தில் அதனை எதிர்த்து போடப்பட்டுள்ள வழக்கில் எதிர் மனுதாரராக இணையவே டெல்லி சென்றுள்ளதாக அரியலூர் மாணவி அனிதாவின் சகோதரர் மணி ரத்னம் கூறியுள்ளார்.
டெல்லி: நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்தால் தனது மருத்துவ கனவு நிறைவேறாது என்று சிபிஎஸ்இ மாணவர்கள் தொடர்ந்துள்ள மனுவில் எதிர் மனுதாரராக இணைந்துள்ள மாணிவ அனிதாவின் சகோதரர் மணிரத்னம் கூறியுள்ளார்.
நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றால் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அதில் இருந்து விலக்கு பெற அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதன் முதற்கட்டமாக ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்க மத்திய அரசு இசைவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றால் அதனை எதிர்ப்பதற்கு வசதியாக சிபிஎஸ்இ மாணவர்கள் சார்பில் வழக்கறிஞர் நளினி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனு தொடர்ந்துள்ளார். ஒரு வேளை விலக்கு அளிக்கும் பட்சத்தில் இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் வாதாடுவதற்கு ஏதுவாக எதிர் மனுதாரராக அரியலூரைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சண்முகம் என்பவரின் மகள் அனிதா எதிர் மனுதாரராக சேர்ந்துள்ளார்.
இதற்காக தனது சகோதரர் மணிரத்னத்துடன் அனிதா டெல்லி சென்றுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த மணிரத்னம் : +2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்தால் கட்டாயம் எனது சகோதரிக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும். மருத்துவராக வேண்டும் என்பது அனிதாவின் கனவு மிகவும் சிரமமப்பட்டே மருத்துவ விண்ணப்பம் வாங்கி விண்ணப்பித்துள்ளோம்.
ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த அணிதா ப்ளஸ் 2வில் 1,176 மதிப்பெண் பெற்று மருத்துவ கட்ஆப்பில் 196.75 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனால் நீட் தேர்வில் 86 மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளார். இந்நிலையில் நீட் தேர்வில் மருத்துவ மாணவர் சேர்க்கைக் கூடாது என்பதே எங்களின் விருப்பம், என்று மணிரத்னம் கூறியுள்ளார்.