ராணுவ ஆளெடுப்பு தேர்வுக்கான கேள்வித்தாள் லீக்.. ரூ. 2 லட்சத்திற்கு விற்பனை.. 18 பேர் கைது!
மும்பை: இந்திய பாதுகாப்பு வேலை வாய்ப்பு தேர்வு வாரியத்தின் மூலம் இன்று நடைபெற்ற எழுத்துத் தேர்வின் வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்ததையடுத்து புனே மண்டலத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக 18 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ராணுவத்துக்கு ஆளெடுக்கும் பணியை இந்த வாரியம் எழுத்துத் தேர்வு, உடல்தகுதித் தேர்வு, வாய்மொழித் தேர்வு ஆகியன மூலம் மேற்கொள்கிறது.
இன்று ராணுவத்துக்கு ஆள்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த நிலையில் புனே மண்டலத்தில் கேள்வித்தாள் கசிந்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து மும்பை, நாசிக், புனே, நாக்பூர் ஆகிய நகரங்களில் அதிரடி ரெய்டுகள் நடத்தப்பட்டன.
அதில் தானே பகுதியில், சிலர் தேர்வு மையங்களில் தேர்வு எழுதாமல் ஆங்காங்கே தங்கும் விடுதிகளில் தேர்வு எழுதியதாக நகர குற்றப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தங்கும் விடுதிகளில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் அங்கு கையில் கேள்வித்தாளை வைத்துக் கொண்டு ஏனோதானோ என்று தேர்வு எழுதிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களைப் பிடித்து போலீஸார் விசாரித்ததில் எழுத்துத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் கேள்வித் தாள்களை பெற்றதாகவும், ஒரு கேள்வித் தாள் ரூ.2 லட்சத்துக்கும் வாங்கியதாகவும் தெரியவந்தது.
இதுதொடர்பாக சட்டவிரோதமாக தேர்வு எழுதிய 18 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களில் இருவர் ராணுவத்தில் பணியாற்றி வரும் கீழ் நிலை அதிகாரிகள் ஆவர்.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து புனே மண்டலத்தில் மட்டும் தேர்வு ரத்து செய்யப்பட்டது.