காவிரி.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து தேவெ கெளடா கட்சி எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா
பெங்களூர்: காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை எதிர்த்து, தேவகவுடாவின் மதசார்பற்ற கட்சி எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளனர்.
காவிரியிலிருந்து வரும் 27ம் தேதிவரை வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை வாரியத்தை இன்னும் 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதுகுறித்து இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவையை கூட்டி விவாதிக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.
மாலை 6 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தையும் சித்தாரமையா கூட்டியுள்ளார். அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட உள்ளது. இவ்விரு கூட்டங்களும், தலைமைச் செயலகமான விதான சவுதாவில் வைத்து நடைபெற உள்ளது.
மதசார்பற்ற ஜனதாதளம்
முன்னதாக, விஷயத்தின் வீரியத்தை அதிகரிக்க முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி திட்டமிட்டு காய் நகர்த்த தொடங்கியுள்ளது.
எம்.பி. ராஜினாமா
இதன்ஒருபகுதியாக ம.ஜ.த கட்சி தங்கள் மக்கள் பிரதிநிதிகளை ராஜினாமா செய்ய வைக்க முடிவு செய்துள்ளது. காவிரி பிரச்சினையின் மைய புள்ளி மண்டியா. இந்த மண்டியா லோக்சபா தொகுதி எம்.பியாக உள்ளவர் ம.ஜ.த கட்சியை சேர்ந்த புட்டராஜு. எனவே அவரிடமிருந்து ராஜினாமா படலத்தை ஆரம்பித்துள்ளது அக்கட்சி.
இரு எம்.பிக்கள்
நேற்று இரவே, புட்டராஜு தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால், ராஜினாமா கடிதத்தை லோக்சபா சபாநாயகரிடம் வழங்காமல், மண்டியா மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார். விரைவில் சபாநாயகருக்கும் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். அக்கட்சிக்கு உள்ள மற்றொரு எம்.பி. தேவகவுடாதான். அவர் ஹாசன் லோக்சபா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
எம்.எல்.ஏக்கள் ராஜினாமா
இத்தோடு விடாமல் கட்சி எம்எல்ஏக்கள் அனைவரையும் கூண்டோடு ராஜினாமா செய்ய உத்தரவிடவும் தேவகவுடா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ம.ஜ.த கட்சிக்கு 40 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில், அனைவரும் ராஜினாமா செய்து தேசத்தின் கவனத்தை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
உள்ளாட்சி பிரதிநிதிகள்
மேலும், ஜில்லா பஞ்சாயத்து, தாலுகா பஞ்சாயத்து ஆகியவற்றின், ம.ஜ.த உறுப்பினர்களும் கூண்டோடு ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளார்கள். காவிரி பாசன பகுதிகளில் மட்டுமே அக்கட்சி செல்வாக்கோடு உள்ளது. காவிரி பிரச்சினையில் தாங்கள் தீவிரமாக இருப்பதாக காட்டாவிட்டால் அடிப்படை ஆட்டம் கண்டுவிடும் என்ற கவலை அக்கட்சிக்கு. ஆனால் இந்த ராஜினாமா முடிவு ஒரு நாடகம் என கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். ம.ஜ.த ராஜினாமா செய்யுமா, வெறும் அறிவிப்போடு போகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.