ஆட்சியை கைப்பற்ற போவது யார்? மகாராஷ்டிரா, ஹரியானாவில் நாளை வாக்கு எண்ணிக்கை!
மும்பை/ சண்டிகர் : மகாராஷ்டிரா, ஹரியானாவில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற கேள்விக்கு நாளை முடிவு தெரிந்து விடும். இரண்டு மாநிலங்களிலும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கும், ஹரியானாவில் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 15ந் தேதி வாக்கு பதிவு நடைபெற்றது. மகாராஷ்டிராவில் கடந்த 25 ஆண்டுகளாக கூட்டணியில் நீடித்து வந்த பாஜக, சிவசேனா கூட்டணி சட்டசபை தேர்தலில் முதல்வர் பதவி மற்றும் தொகுதி பங்கீடு சிக்கல் காரணமாக உறவை முறித்துக் கொண்டன.
அதே போல் ஆளுங்கட்சி கூட்டணியான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடையிலும் தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து அவையும் தங்களது 15 ஆண்டு உறவை முறித்துக் கொண்டன.
5 முனை போட்டி
இதனால் மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பாஜக, சிவசேனா, நவநிர்மான் சேனா என ஐந்து முனை போட்டி ஏற்பட்டது. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக, சிவசேனா அதிக இடங்களை கைப்பற்றியது.
தனி அணிகள்
மோடி அலை காரணமாகவே வெற்றி பெற்றதாக கருதிய பாஜக, இம்முறை தனித்து களம் இறங்க முடிவு செய்தது. அதே போல் தங்களது செல்வாக்கில் வெற்றி பெற்றதாக கூறி வரும் சிவசேனா சட்டசபை தேர்தலில் எங்களது பலத்தை நிரூபித்தே தீருவோம் என கூறி தனித்து களம் இறங்கியது.
மந்த வாக்குப் பதிவு
இதனால் அங்கு தேர்தல் பிரசார களம் களை கட்டியது. ஆனால் பிரசாரத்தில் அனல் பறந்த அளவுக்கு வாக்குபதிவு அன்று அதற்கு மாறான நிலையே காணப்பட்டது. மிகவும் மந்தமான முறையில் நடைபெற்ற வாக்குபதிவில் இறுதியில் 63 சதவீதம் வாக்குகளே பதிவாகின.
ஹரியானா நிலவரம்
ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக, முன்னாள் முதல்வர் சவுதாலாவின் இந்திய லோக்தள் ஆகிய கட்சிகள் முக்கிய அணிகளாக களம் கண்டன. அங்கும் பிரசாரத்தின் போது தேசிய கட்சிகள் ஒன்றையொன்று கடுமையாக விமர்சித்து கொண்டன.
73% வாக்குகள்
ஆனால் ஹரியானாவில் இம்முறை வரலாறு காணாத வகையில் 73 சதவீத வாக்குகள் பதிவாகின.
பாஜக வெல்லும்?
இரண்டு மாநிலங்களிலும் நடைபெற்ற தேர்தலுக்கு பிந்திய கருத்து கணிப்புகளில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் பாஜக தனிப் பெரும் கட்சியாக வரும் என்றும் கூறப்படுகிறது. அதனால் கூட்டணிகளின் தயவுடன் பாஜ இரண்டு மாநிலங்களிலும் ஆட்சி அமைக்கும் என தெரிகிறது.
மீண்டும் காங்கிரஸ்?
ஹரியானாவில் 3வது முறையாக ஆட்சி கட்டிலில் அமருவோம் என காங்கிரஸ் முதல்வர் பூபேந்திர் சிங் ஹூடா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை
நாளை வாக்கு எண்ணிக்கையை யொட்டி இரண்டு மாநிலங்களிலும் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு பிறகு நடைபெறும் சட்டசபை பொது தேர்தல் என்பதால் இதன் முடிவுகள் குறித்து நாடு முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.