உபி இரட்டைக் கொலை: சிறுமிகளில் ஒருவர் பலாத்காரம் செய்யப்படவில்லை என போலீஸ் தகவல்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் இரட்டை சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு தூக்கில் தொங்க விடப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட இரண்டு சிறுமிகளில் ஒருவர் பலாத்காரம் செய்யப்படவில்லை என தெரிய வந்துள்ளதாக அம்மாநில டிஜிபி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் படான் மாவட்டத்தில் உள்ள கத்ரா கிராமத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி 14 மற்றும் 15 வயதுடைய உறவுக்கார தலித் சிறுமிகள் இருவர் மாமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். நள்ளிரவில் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற அவர்களை ஒரு கும்பல் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கூறப்பட்டது.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை உண்டாக்கிய இந்த சம்பவத்திற்கு ஐநாவும் கண்டனம் தெரிவித்தது. இச்சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். சரியாக நடவடிக்கை எடுக்காத இரு போலீஸ்காரர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சிறுமிகள் கொலை செய்யப்பட்டது குறித்து, உத்தரபிரதேச டி.ஜி.பி. ஆனந்த் லால் பானர்ஜி செய்தியாளர்களிடத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பலாத்காரம் செய்யப்படவில்லை...
கொலை செய்யப்பட்ட சிறுமிகளில் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பது உறுதியாகவில்லை. அவர் சொத்துபிரச்சினையில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். ஏனெனில், அந்த சிறுமி அந்த குடும்பத்தின் ஒரே வாரிசு ஆவார்.
சொத்துப் பிரச்சினை..?
அந்த சிறுமியின் தந்தைக்கு 3 சகோதரர்கள். இவர்கள் மூவருக்கும் பெரிய அளவில் சொத்து எதுவும் கிடையாது. எனவே சிறுமி உயிருடன் இருந்தால் தங்களுக்கு சொத்து எதுவும் கிடைக்காமல் போகலாம் என்பதால் அவள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம். எனினும், இது ஒன்றே கொலைக்கான நோக்கம் என்று கூறிவிட முடியாது.
போன் உரையாடல்கள்...
கொலை செய்யப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தினர் தொடர்பான போன் உரையாடல்கள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அப்போது அவர்களில் பலர் சம்பவம் நடந்த அன்று வெகு நேரம் உரையாடி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த குற்றங்களில் தொடர்புபடுத்தி பேசப்பட்டவர்களுக்கு சம்பந்தம் இல்லை என்பது உறுதியானால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.
தடயவியல் நிபுணர்கள்...
உள்ளூர் போலீசார் புகார் மீது அலட்சியமாக இருந்தார்கள் என்பது உண்மைதான். சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றிருந்தால் அவர்களால் ஏராளமான ஆதாரங்களை திரட்டி இருக்க முடியும். ஆனால் அவர்கள் முழு முயற்சி எடுக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள்தான் முக்கியமான ஆதாரங்களை சேகரித்தனர்.
தொடரும் குழப்பம்...
பிரேத பரிசோதனை அறிக்கை சிறுமிகள் தூக்கில் தொங்கியதாக கூறியது. ஆனால் சிறுமிகளின் உடல்களை ஆய்வு செய்த நிபுணர்கள் சிறுமிகள் இருவரும் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளனர் என்பதை உறுதி செய்துள்ளனர்.
உண்மை கண்டறியும்சோதனை...
இந்த சம்பவத்தில் அனைத்து குற்றவாளிகளிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதிரடி உத்தரவு...
இதற்கிடையே படான் மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) உதய்ராஜ் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அதுல் சக்சேனா ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டது. மேலும், மாநிலம் முழுவதும், 66 ஐ.ஏ.எஸ். மற்றும் 42 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக இட மாற்றம் செய்யப்பட்டனர். அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையில் நேற்று நடந்த அரசு நிர்வாக உயர்மட்ட குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.