அரசு இடஒதுக்கீடு... குலுக்கல் முறையில் மாணவர்களைத் தேர்வு செய்த சித்தூர் தனியார் பள்ளி
சித்தூர்: சித்தூர் மாவட்டப் பள்ளி ஒன்றில் படிப்பதற்காக, அரசு இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சர்மன் தனியார் பள்ளியில் அரசு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நேற்று 6ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அரசு இடஒதுக்கீடு பாராபட்சமின்றி நேர்மையாகவும், அதேசமயம் வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும் என திட்டமிட்டமிடப் பட்டது. எனவே, மாணவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பது என முடிவு செய்யப் பட்டது.
அதன்படி, விண்ணப்பித்ததில் அரசு சலுகை பெற தகுதியான மாணவர்களின் பெயர்கள் சீட்டுகளில் எழுதப்பட்டது. பின்னர், அம்மாவட்ட கூடுதல் இணை கலெக்டர் வெங்கடசுப்பாரெட்டி, மாவட்ட கல்வி அதிகாரி பிரதாப்ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு 6-ம் வகுப்பில் சேருவதற்கான மாணவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்தனர்.
நேற்று குலுக்கலில் தேர்வான மாணவர்களின் முழு பெயர் விவரம் இன்று (வியாழக்கிழமை) மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் வெளியிடப்படுகிறது. தனியார் மாடர்ன் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்குவதுடன், அரசு சலுகைகளும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தக் குலுக்கல் நிகழ்ச்சியில் கல்வி அதிகாரிகள் சிட்டிபாபு, பிரபாகர்ராவ் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.