பலுசிஸ்தானில் மனித உரிமை மீறல்கள்... பாக். மீதான மோடியின் குற்றச்சாட்டுக்கு வங்கதேசம் ஆதரவு
டெல்லி: பாகிஸ்தான் ராணுவம் பலுசிஸ்தானில் நிகழ்த்தி வரும் மனித உரிமை மீறல் தொடர்பாக கொள்கைத் திட்டம் ஒன்றை உருவாக்க உள்ளதாகவும் வங்க தேச அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை டெல்லியில் கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில், பலுசிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்களை பாகிஸ்தான் சித்திரவதை செய்து வருகிறது என்றும், அங்கு மனித உரிமை மீறல் நடந்து வருகிறது என்றும் பாகிஸ்தான் மீது கடுமையாக குற்றம்சாட்டிப் பேசினார்.
பிரதமர் மோடியின் இந்தப் பேச்சிற்கு வங்கதேசம் ஆதரவு தெரிவித்துள்ளது. மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள வங்க தேசத்தின் தகவல்துறை அமைச்சர் ஹசனுல் ஹக் இனு, பாகிஸ்தான் ராணுவம் செய்து வரும் அட்டூழியங்களை பலுசிஸ்தான் எதிர் கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும், இது 1971 ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானாக வங்க தேசம் இருந்த போது, குறி வைத்து தாக்கப்பட்டது போன்று, பலுசிஸ்தான் மீதும் தற்போது தாக்குதல் நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த கால வரலாற்றில் இருந்து பாகிஸ்தான் எதையும் கற்றுக் கொள்ளவில்லை. என்று அவர் காட்டமாக பாகிஸ்தானை விமர்சனம் செய்துள்ளார். வங்க தேசத்தை பொறுத்தவரை விடுதலைப் போராட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.