லாக்கர் பொருட்களுக்கு வங்கி பொறுப்பு கிடையாதாம்.. ரிசர்வ் வங்கி முட்டாள்தனத்திற்கு அளவே இல்லையா?
லாக்கர்களில் வைக்கப்படும் பொருட்கள் சேதமடைந்தால் அதற்கு வங்கிகள் பொறுப்பாகாது என தெரியவந்துள்ளது.
டெல்லி: லாக்கர்களில் வைக்கப்படும் பொருட்கள் சேதமடைந்தால் அதற்கு வங்கிகள் பொறுப்பாகாது என தெரியவந்துள்ளது. இந்த அதிர்ச்சிகர தகவல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி வெளிவந்துள்ளது.
பாதுகாப்புக்காக நகைள், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் வங்கி லாக்கரில் வைத்து வருகின்றனர். இதற்காக வங்கிகளும் வைக்கும் பொருட்களுக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயித்து வசூலித்து வருகின்றன.
இந்நிலையில் டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வங்கிகளில் வைக்கப்படும் பொருட்கள் தொடர்பான தனது சந்தேகங்களை ஆர்டிஐ மூலம் ஆர்பிஐ உட்பட 19 வங்கிகளிடம் கேட்டார். அதற்கு வங்கிகள் அளித்துள்ள பதில் அதிரச் செய்துள்ளது.
வங்கிகள் பொறுப்பாகாது
அதன்படி வங்கி லாக்கரில் வாடிக்கையாளர்கள் வைக்கும் நகை உட்பட எந்தப் பொருட்களுக்கும் வங்கி பொறுப்பாகாது என தெரியவந்துள்ளது. மேலும் லாக்கரில் வைக்கப்படும் நகைகளோ அல்லது ஆவணங்கள் உள்ளிட்ட இதர பொருட்களோ காணாமல் போனாலோ அல்லது சேதமடைந்தாலோ அதற்கு வங்கிகள் இழப்பீடு வழங்காது என்பதும் வெளிவந்துள்ளது.
வாடிக்கையாளர்கள் தான் பொறுப்பு
மேலும் வங்கி லாக்கரில் வாடிக்கையாளர்கள் தங்களின் பொருட்களை வைப்பது என்து குத்தகை ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் என்றும் வங்கிகள் கூறியுள்ளன. இதனால் லாக்கரில் வைப்படும் பொருட்களுக்கு வாடிக்கையாளர் தான் பொறுப்பு என்றும் வங்கிகள் தெரிவித்துள்ளன.
இது வாடிக்கையாளர்களுக்கு தெரியுமா?
இந்த நிபந்தனைகள் குறித்து வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் தெளிவாக தெரிவித்து தான் தங்களின் லாக்கரில் பொருட்களை வைக்கிறதா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. ஒரு வேலை இந்த நிபந்தனைகள் வாடிக்கையாளர்களுக்கு தெரியும் படி இருந்தால் வாடிக்கையாளர்கள் எப்படி எதற்கும் பொறுப்பாகாத ஒருவரிடம் நகைகளை கொடுத்து வைப்பார்கள் என்றும் கேள்வி எழுந்துள்ளது.
நிபந்தனைகளை நீக்க வேண்டும்
இந்த நிபந்தனைகள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தெரியப்படுத்தப்படுகிறதா என்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வங்கிகளின் இந்த திட்டமிட்ட நிபந்தனைகளை தங்களின் ஒப்பந்த அறிக்கையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அந்த வழக்கறிஞர் வலியுறுத்தியுள்ளார்.
அதற்கு ஏன் வங்கி லாக்கர்?
வங்கிகள் பொறுப்பேற்காத போது வாடிக்கையாளர்கள் தங்களின் பொருட்களை ஏன் வங்கிகளில் வைக்க வேண்டும் வீட்டிலேயே வைத்துக்கொள்ளலாமே என்றும் மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றது. இது வங்கிகளின் பொறுப்பற்ற தனத்தையும் அவர்களின் பாதுகாப்பையுமே வெளிப்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
எதற்கும் பொறுபேற்காத வங்கிளிடம் நம் பொருட்களையும் கொடுத்து அதனை பாதுகாக்க பணமும் ஏன் கொடுக்க வேண்டும் என்றும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுபோன்ற பொறுப்பற்ற கொள்கைகளை பின்பற்றும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.