ஆட்சியில் இருப்பதே மக்களுக்கு சேவை செய்யத்தான்.. குஜராத் மாடல்.. போட்டுத் தாக்கிய பிரதமர் மோடி!
அகமதாபாத் : கடந்த 20 ஆண்டுகளாக குஜராத் அடைந்துவரும் வளர்ச்சி மாநிலத்தின் பெருமையாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில் குஜராத் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ரூபாய் 3,050 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.
இந்த விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஆட்சியில் இருப்பது, அதிகாரத்தில் இருப்பது என்பது மக்களுக்கு சேவை செய்யத்தான் எனப் பேசியுள்ளார்.
மோடி டக்கென கேட்ட கேள்வி.. எதிர்பாராமல் திகைத்த அன்புமணி.. அப்போ கன்பார்மா? 20 நிமிஷம் நடந்தது என்ன?
குஜராத்
குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி பிரதமர் மோடி 4வது முறையாக அங்கு சென்றுள்ளார். குஜராத் தேர்தலை முன்னிட்டு வளர்ச்சித் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி பல திட்டங்களைத் துவங்கி வைத்தார். பல்வேறு புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். குஜராத்தில் ரூ.3,050 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
மக்கள் நலனுக்கே முன்னுரிமை
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "கடந்த 8 ஆண்டுகளாக மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டதால்தான் நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். நாங்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வேலை செய்வதில்லை. எங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்காக கடமையாற்றுகிறோம்.
மக்களுக்கு சேவை செய்யவே அதிகாரம்
எங்களைப் பொறுத்தவரை ஆட்சியில் இருப்பது, அதிகாரத்தில் இருப்பது என்பது மக்களுக்கு சேவை செய்யத்தான். வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள்தான் எங்கள் அரசின் முன்னுரிமை. குஜராத் மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள அதிக வளர்ச்சி என்பது குஜராத்தின் பெருமை. கடந்த 8 ஆண்டுகளாக இந்த மாநில மக்களின் நலன்களுக்காகவே அதிக அழுத்தம் கொடுத்து பணியாற்றி வருகிறோம்." எனப் பேசினார்.
ராக்கெட் ஏவும்போது
மேலும், பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் இந்திய விண்வெளி துறையின் இன் - ஸ்பேஸ் மைய தலைமையகத்தை திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது, இஸ்ரோ ராக்கெட்டை ஏவுகையில் ஒட்டு மொத்த நாடும் எழுந்து நின்று அதன் வெற்றிக்காக பிரார்த்திக்கிறது. நமது விஞ்ஞானிகளின் சாதனையை இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் கொண்டாடுகிறார். நாட்டின் கடைகோடி பகுதிக்கும் செயற்கைக்கோள் மூலமாக தகவலை எடுத்துச் சென்று கல்வித்துறை மாற்றத்திற்கு விண்வெளி தொழில்நுட்பம் உதவுகிறது எனத் தெரிவித்தார்.