மீண்டும் மீண்டும் மாற்றுத் திறனாளிகளிடம் முரட்டுத்தனத்தைக் காட்டும் பெங்களூரு ஏர்போர்ட்!
பெங்களூரு: மாற்றுத் திறனாளி பாராலிம்பிக் வீரர் ஆதித்யா மேத்தாவிடம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில், பாதுகாவலர்கள் நடந்து கொண்ட மனிதாபிமானமற்ற செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
ஆதித்யா மேத்தாவின் செயற்கைக் கால்களைக் கழற்றச் சொல்லி முரட்டுத்தனமாக நடந்துள்ளனர். இதனால் அவரது காலிலிருந்து ரத்தம் கொட்டியுள்ளது. சோதனை என்ற பெயரில் நடந்த இந்த அட்டகாசம் அனைவரையும் அதிர வைத்துள்ளது. இதே விமான நிலையத்தில் 2 மாதங்களுக்கு முன்புதான் இப்படி ஒரு கொடுமையைச் சந்தித்திருந்தார் ஆதித்யா மேத்தா. அதே விமான நிலையத்தில் மீண்டும் அவரை இப்படி சித்திரவதை செய்துள்ளனர் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை பாதுகாவலர்கள்.
பாரா சைக்ளிங் வீரர் ஆதித்யா. சமீபத்தில் ரியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியிலும் கலந்து கொண்டவர். செவ்வாய்க்கிழமை இவர் பெங்களூரு விமான நிலையம் வந்தார். அப்போது பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் இவரது செயற்கைக் கால்களைக் கழற்றச் சொல்லியுள்ளனர் பாதுகாவலர்கள். சோதனை காரணமாக விமானம் தவறி விடுமோ என்ற பதட்டத்தில் ஆதித்யா தனது செயற்கைக் காலை வேகமாக மாட்டியபோது காலில் இடித்துக் கொண்டு ரத்தம் கொட்டியுள்ளது.
நான் வீட்டுக்குத் திரும்பி எனது செயற்கைக் காலைக் கழற்றிப் பார்த்தபோதுதான் ரத்தம் வந்தது தெரிய வந்தது என்று கூறியுள்ளார் ஆதித்யா. இதுதொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார் ஆதித்யா மேத்தா. தாக்கூர் தாஸ் என்ற பாதுகாவலர்தான் தன்னிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும் அவர் பெயர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே தன்னை இவர்தான் சோதனை என்ற பெயரில் கொடுமைப்படுத்தியதாகவும் மேத்தா கூறியுள்ளார்.
3 வருடங்களுக்கு முன்பு ஆசிய பாரா சைக்ளிங் சாம்பியன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் மேத்தா. அடுத்தடுத்து இரண்டு முறை ஒரே பாதுகாவலர் தன்னை இவ்வாறு விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்துள்ளதால் தான் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார் ஆதித்யா. மத்திய தொழிலக பாதுகாப்புப் படை மீது வழக்குத் தொடருவது குறித்தும் தான் ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
செயற்கைக் காலை கழற்றினால் மீண்டும் அதைப் பொருத்துவது சிரமமாகி விடும் என்று மேத்தா திரும்பத் திரும்பக் கூறியபோதும், அது உன் பிரச்சினை என்று மனிதாபிமானமே இல்லாமல் கூறியுள்ளார் அந்தப் பாதுகாவலர் தாக்கூர்.
விமான நிலையங்களில் பாடி ஸ்கேனர்களை வாங்க அரசிடம் பணம் இல்லை என்று மத்திய அரசு கூறியதாக கேள்விப்பட்டேன். நான் கூட அரசுக்காக நிதி சேர்த்துத் தயாராக உள்ளேன். ஆனால் இதுபோன்ற கொடுமைகளுக்கு அரசு தயவு செய்து முடிவு கட்ட வேண்டும் என்று கோபத்துடன் கூறியுள்ளார் மேத்தா.
தற்போது அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அது சரியாகும் வரை மேத்தாவால் நடமாட முடியாது. காயம் சரியாகும் வரை செயற்கைக் காலை பொருத்த வேண்டாம் என்று டாக்டர்கள் கூறியுள்ளனராம்.
வேறு எங்கும் இப்படிப்பட்ட பிரச்சினையை நான் சந்தித்ததில்லை. ஆனால் பெங்களூரு விமான நிலையத்தில்தான் மோசமான சம்பவத்தை சந்தித்துள்ளேன் என்றும் கூறியுள்ளார் மேத்தா.
பெங்களூரு விமான நிலைய பாதுகாவலர்கள் இதுபோல மனிதாபிமானமற்ற முறையில் நடப்பது இது முதல் முறையல்ல. முன்பு நடிகர் பிருத்விராஜின் (பப்லு) மகன் விஷயத்திலும் கூட (/news/2006/10/05/flight.html) இப்படித்தான் முட்டாள்தனமாக நடந்து கொண்டனர் இவர்கள் என்பது நினைவிருக்கலாம்.
மாற்றுத்திறனாளிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து இதுபோன்ற மனம் படைத்தவர்களுக்கு கவுன்சலிங் நடத்துவது அவசியமாகிறது.