இன்ஸ்பெக்டருடன் சண்டை.. 23 பாராசிட்டமால் மாத்திரைகளை விழுங்கிய பெண் கான்ஸ்டபிள்
பெங்களூர்: இன்ஸ்பெக்டருடன் சண்டை போட்ட, பெண் கான்ஸ்டபிள், 23 பாராசிட்டமால் மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடகு மாவட்ட டிஎஸ்பி கணபதி சமீபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகாவை உலுக்கி வருகிறது. பெங்களூர் நகர வளர்ச்சி அமைச்சரான கே.ஜே.ஜார்ஜ் உள்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், தனக்கு தொல்லை கொடுத்ததாகவும், மேலதிகாரிகள் இருவர் தொந்தரவு செய்ததாகவும் கணபதி எழுதி வைத்த தற்கொலை கடிதம் வைரலானது.
எதிர்க்கட்சிகள் போராட்டம், கோர்ட் தலையீடு காரணமாக, ஜார்த் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த பரபரப்பு ஓய்வதற்குள் பெங்களூர், விஜயநகர் காவல் நிலைய பெண் கான்ஸ்டபிள் ரூபா (33) மாத்திரைகளை சாப்பிட்டு நேற்று மாலை தற்கொலைக்கு முயன்றார்.
இன்ஸ்பெக்டர் சஞ்சீவ் கவுடாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரூபா, தானும், கணபதியை போல, தற்கொலை செய்ய போவதாக கத்திக்கொண்டே தனது ஸ்கூட்டியில் போலீஸ் குடியிருப்புக்கு கிளம்பியுள்ளார். போகும் வழியில், 23 பாராசிட்டமால் மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார்.
குடியிருப்பு அருகே பைக் சென்றபோது நிலை தடுமாறி கீழே மயங்கி விழுந்துள்ளார். போலீஸ் நிலையத்தில் இருந்து, ரூபாவை பின்தொடர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் இதை பார்த்து அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். ஐசியூ பிரிவில் இருந்தாலும் உயிருக்கு ஆபத்தில்லை என்று டாக்டர்கள் அறிவித்தனர்.
தாவணகெரேயை சேர்ந்தவரான ரூபாவின் கணவர் அங்கு வக்கீலாக பணியாற்றுகிறார். தம்பதிகளுக்கு 3 வயதில் மகள் உள்ளார். செல்போன் திருட்டு வழக்கு ஒன்றில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை ரூபா பயன்படுத்தியதாக இன்ஸ்பெக்டர் குற்றம்சாட்டியதாகவும் அதனால் மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஒரு பிரச்சினைக்காக, பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த இன்ஸ்பெக்டர் சஞ்சீவ் கவுடா, 3 நாட்கள் முன்புதான் பணியில் மீண்டும் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.