ஆம்புலன்ஸ் வந்தால் சிக்னலில் தானாக கிரீன் விழும்: பெங்களூருவில் நவீன திட்டம் அறிமுகம்
பெங்களூரு: அவசரமாக செல்ல வேண்டிய வாகனங்கள் வரும்போது தானாகவே சிகப்பு சிக்னல் பச்சையாக மாறும் வகையிலான தொழில்நுட்பம் பெங்களூரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
டிராபிக் நெரிசலுக்கு பெயர்போன ஊர் பெங்களூரு. இந்நகரில் மொத்தம் 35 லட்சம் டூவீலர்கள் உள்ளன. இந்தியாவிலேயே அதிக டூவீலர்கள் இருப்பது இங்குதான். இதுதவிர 10 லட்சம் கார்கள் உள்ளன. மாநகராட்சி பஸ், பிற மாநில வாகனங்கள் என எப்போதும் நெரிசலில் விழிபிதுங்கி நிற்கும் பெங்களூரு சாலைகள்.
ஆம்புலன்சுக்காவது வழிவிடுங்கள்
இதனால் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் கூட குறிப்பிட்ட நேரத்துக்கு போக வேண்டிய இடத்துக்கு போக முடியாமல் சைரனை அலற விடுவதை அவ்வப்போது பார்க்க முடிகிறது.
தானாக மாறும்
இந்த பிரச்சினைக்கு தீர்வாக ஆம்புலன்ஸ், பையர் சர்வீஸ் வாகனங்களை பார்த்ததும் தானாகவே சிக்னல்கள் கிரீன் கலராக மாறும் வகையிலான தொழில்நுட்பம் பெங்களூருவில் அறிமுகமாக உள்ளது.
353 சிக்னல்கள்
நகரிலுள்ள முக்கியமான சாலை பகுதிகளில் மொத்தம் 353 சிக்னல்களில் ரூ.75 கோடி செலவில் சென்சார் கருவிகள் பொருத்தப்பட உள்ளன. இந்த கருவிகள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களின் மேல் சுழலும் விளக்கை அடையாளம் கண்டு, அந்த பாதையை போக்குவரத்திற்கு திறக்கும் வகையில் கிரீன் லைட்டை எரியவிடும். இந்தாண்டு இறுதிக்குள் இத்திட்டம் அமலுக்கு வந்துவிடும்.
விஐபி வந்தாலும் அசராது
பல முன்னேறிய நாடுகளில் இதுபோன்ற நடைமுறை இருந்தாலும், நாட்டில் முதல்முறையாக பெங்களூருவில்ல் சிக்னல் சென்சார் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான டெண்டர் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளன. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், விஐபிகள் வாகனங்கள் சென்றாலும் கூட ஆம்புலன்ஸ் செல்லும் ரூட்டைத்தான் கிளியர் செய்துவிடும் இந்த சிக்னல்கள்.