அர்த்த சாஸ்திரம், சாணக்கிய நீதி அடிப்படையில் பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குவோம்: ராணுவ தளபதி
வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்யாமல் அர்த்த சாஸ்திரம், சாணக்கிய நீதியின்படி உள்நாட்டு அடிப்படையிலேயே பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்கிறார் ராணுவ தளபதி பிபின் ராவத்.
டெல்லி: வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்யாமல் அர்த்த சாஸ்திரம், சாணக்கிய நீதியின்படி உள்நாட்டு அடிப்படையிலேயே பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என ராணுவ தளபதி பிபின் ராவத் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ராணுவ தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கில் பிபின் ராவத் பேசியதாவது:
நமது ராணுவத்தின் ஒவ்வொரு பிரிவிலும் மிகப் பெரிய தேவை இருக்கிறது, எதிர்கால யுத்தங்கள் என்பவை மிகவும் நவீனமயமானதாக இருக்கும். அதற்கேற்ப நாம் தயாராக வேண்டும்.
அரசு உதவினால் தேவையான தொழில்நுட்பங்களை மிகச் சரியாக பயன்படுத்த முடியும். வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்வதை நாம் குறைக்க வேண்டும்.
அடுத்த யுத்தங்களை உள்நாட்டு கட்டமைப்புகளுடன் நாம் எதிர்கொள்ள வேண்டும். ராணுவ தொழில்நுட்பத்தில் மெல்ல மெல்ல வெளிநாட்டு இறக்குமதி எனும் கொள்கையில் இருந்து விலக வேண்டும்.
அர்த்த சாஸ்திரம், சாணக்கிய நீதிகளின் அடிப்படைகளிலான கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும்.
இவ்வாறு பிபின் ராவத் கூறினார்.