மாட்டை தொடர்ந்து பாஜகவினரிடம் சிக்கியுள்ள 'நாய்'!
டெல்லி: பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹாவை நாயுடன் ஒப்பிட்டு அக்கட்சியின் மூத்த தலைவர் கைலாஷ் விஜய் வர்கியா விமர்சித்து பேட்டியளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏற்கனவே மாட்டிறைச்சி சர்ச்சையின்போது, ஷாருக்கானை பாகிஸ்தான் போகுமாறு கூறி சர்ச்சையில் சிக்கிய வர்கியா தற்போது நாய் பிரச்சினையில் சிக்கியுள்ளார்.
பீகார் மாநில சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதா கட்சி கூட்டணி வெற்றி பெற்றது. இந்நிலையில், முக்கிய போட்டியாளராக கருதப்பட்ட பாஜகவை சேர்ந்த எம்.பியான, சத்ருகன் சின்ஹா, திடீரென ஐக்கிய ஜனதா தலைவர் நிதீஷ் குமாரை சந்தித்து பேசினார். அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதன்பிறகு நிருபர்களிடம் அவர் பேசுகையில், பாஜக சார்பில் என்னை, முதல்வர் வேட்பாளராக அறிவித்திருந்தால், தேர்தல் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும் என்று கூறினார்.
இதுகுறித்து விஜய் வர்கியாவிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது:
கார் நகரும்போது, அதில் நாய் இருந்தால் அதுவும் நகரும். அப்போது அந்த நாய், தன்னால்தான் அந்த கார் நகர்கிறது என்று நினைத்துக் கொள்ளும். பாஜக எந்தவொரு தனிநபரையும் நம்பியிருக்கிற கட்சியல்ல. பாஜக ஒரு மிகப்பெரிய அமைப்பாகும்.
பாஜகதான், சத்ருகன் சின்ஹாவுக்கு அரசியலில் அடையாளத்தை ஏற்படுத்தித் தந்தது. அவரால், பாஜகவுக்கு அடையாளம் கிடைக்கவில்லை. பாஜகவுக்கு எந்த அளவுக்கு விசுவாசமாக இருப்பது என்பது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
மாட்டிறைச்சி சர்ச்சைகளை தொடர்ந்து, சகிப்புத்தன்மை பற்றி நடிகர் ஷாருக்கான் கருத்து தெரிவித்தார். அப்போது, அவரை பாகிஸ்தான் செல்லுமாறு கூறி விமர்சித்து விஜய் வர்கியா வெளியிட்ட பதிவுகள் சர்ச்சைகள் ஏற்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.