ஜார்க்கண்டில் ராஜ்யசபா இடைத்தேர்தல்: பா.ஜ.க.வின் எம்.ஜே.அக்பர் வெற்றி!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற ராஜ்யசபா இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் எம்.ஜே. அக்பர் வெற்றி பெற்றுள்ளார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ராஜ்யசபா எம்பியான கே.டி.சிங், திரிணாமுல் கட்சியில் இணைந்தார். இதனால் அவர் தமது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜார்க்கண்டில் ராஜ்யசபா இடைதேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில் பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் எம்.ஜே. அக்பரும், அவரை எதிர்த்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் ஹாஜி ஹூசைன் அன்சாரியும் போட்டியிட்டனர்.
மொத்த முள்ள 80 எம்.எல்.ஏ.க்களில் 78 பேர் வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர். இதில் ஒரு வாக்கு செல்லாதது என்று அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பதிவான வாக்குகள் 77. இதில் எம்.ஜே. அக்பருக்கு ஆதரவாக 48 வாக்குகளும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் ஹாஜி ஹூசைன் அன்சாரிக்கு ஆதரவாக 29 வாக்குகளும் பதிவாகியிருந்தன.
இதையடுத்து எம்.ஜே. அக்பர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இம்மாநில சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 82. இதில் ஒரு இடம் காலியாக உள்ளது. நியமன எம்எல்ஏவுக்கு ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்கும் உரிமை கிடையாது.
மேலும் ஜார்க்கண்ட் கட்சியைச் சேர்ந்த அனோஸ் எக்கா, சங்கர்ஸ் மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த நவ் ஜவான் ஆகியோர் வாக்களிக்கவில்லை. தற்போது எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.ஜே. அக்பரின் பதவிக் காலம் இன்னும் ஓராண்டு காலம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.