ஹரியானாவில் தொங்கு சட்டசபை- இந்தியா டிவி கருத்துக் கணிப்பு
சண்டிகர்: ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலில் தொங்கு சட்டசபை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும், பாஜக தனிப்பெரும் கட்சியா வெற்றிபெறும் என்றும் இந்தியா டிவி மற்றும் சி-வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
அக்டோபர் 15ம்தேதி மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களின் சட்டசபைகளுக்கு பொதுத் தேர்தல் நடக்கிறது. ஹரியானாவின் நிலவரம் குறித்து இந்தியா டிவி மற்றும் சி-வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பி தெரியவந்துள்ள தகவல்கள் வருமாறு;
பாஜக தனிப்பெரும் கட்சி
மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக தனிப்பெரும் கட்சியாக 37 இடங்களில் வெற்றி பெறும். அறுதி பெரும்பான்மை பெற அப்படியும் 9 சீட்டுகள் தேவைப்படும்.
காங்கிரஸ் மோசம்
இந்திய தேசிய லோக் தள கட்சி 22 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது. தற்போதைய ஆளும் காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பதால் இயல்பாகவே அதிருப்தி அலை உருவாகியுள்ளது.
ஆம் ஆத்மி
ஹரியானாவில் 6 இடங்களை ஹரியானா ஜன்கிட் காங்கிரஸ் கட்சியும், 6 இடங்களை ஆம் ஆத்மி உள்ளிட்ட பிற கட்சிகளும் பிடிக்கலாம்.
கடந்த தேர்தலின் நிலை
2009ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களிலும், இந்திய தேசிய லோக் தள கட்சி 31 இடங்களையும், பாஜக 4 தொகுதிகளையும், ஹரியானா ஜன்கிட் காங்கிரஸ் கட்சி 6 இடங்களையும், பிறர் 9 இடங்களையும் கைப்பற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.