மதிமுக விலகல்... மகிழ்ச்சியுமில்லை, வருத்தமும் இல்லை...: முரளிதர ராவ் கருத்து
டெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதால் மகிழ்ச்சியும் இல்லை, வருத்தமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார் பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது மதிமுக. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சி அமைத்தது. கூட்டணியில் அங்கம் வகித்த போதும், தொடர்ந்து மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை விமர்சித்து வந்தது மதிமுக. இதனால், வைகோவுக்கு பாஜக தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற மதிமுக உயர்மட்ட குழுக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவது என அக்கட்சி முடிவு செய்தது.
இது தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவிடம் செய்தியாளர்கள் கருத்துக் கேட்டனர். அதற்கு அவர், ‘பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகியது துரதிருஷ்டமானது என்ற போதிலும், வைகோவின் இந்த முடிவு குறித்து பாரதீய ஜனதா வருத்தப்படவும் இல்லை, மகிழ்ச்சி அடையவும் இல்லை.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிராகவும் அவர் ஆட்சேபகரமாக பேசிய போதும் நாங்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டோம். எங்களுடனான உறவை ம.தி.மு.க. முறித்துக் கொண்டதால், தமிழ்நாட்டில் பாரதீய ஜனதாவுக்கோ, தேசிய ஜனநாயக கூட்டணிக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது''எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications